முக்கிய விரதங்கள்

பிரதட்சண விரதம்: இன்று முதல் தினமும் கோவிலை வலம் வாருங்கள்...

Published On 2023-06-29 04:25 GMT   |   Update On 2023-06-29 04:25 GMT
  • ஒவ்வொரு காலடியும் முன் ஜென்மங்களில் நாம் செய்த பாபங்களை விலக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
  • இன்று ஆரம்பித்து கார்த்திகை மாத உத்தான ஏகாதசி வரை (23.11.23) இந்த பிரதட்சணத்தைச் செய்யலாம்.

தெய்வ வழிபாட்டில் மிக சுலபமான வழி பிரதட்சணம் செய்வது ஆகும். இதையே வலம் வருதல், சுற்றி வருதல், என்றும் கூறுவார்கள்.

ஆலயங்களில் நாம் பிரதட்சணம் செய்யும் பொழுது நாம் வைக்கும் ஒவ்வொரு காலடியும் முன் ஜென்மங்களில் நாம் செய்த பாபங்களை விலக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த பிரதட்சணத்தையே ஒரு விரதமாகச் செய்யலாம்.

அதாவது ஆனி மாத துவாதசி (ஸ்ரீ விஷ்ணு சயனிக்கும் ஏகாதசி தினமான) இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து ஸ்ரீ விஷ்ணு விழித்தெழுந்திருக்கும் கார்த்திகை மாத உத்தான ஏகாதசி வரை 23.11.23 (வியாழக்கிழமை) வரை உள்ள காலங்களில் இந்த பிரதட்சணத்தைச் செய்யலாம். ஆலயங்களில் காலை, மாலை வேளைகளில் பிரதட்சணம் செய்யலாம். அரச மரத்தையும் துளசியையும் காலையில்தான் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

கோவிலுக்கு சென்று கருவறையில் உள்ள கடவுளை வணங்கிய பின்னர் கோவில் பிரகாரத்தை சுற்றி வருவது வழக்கம்.

எல்லோரும் 3 முறை தானே சுற்றுகின்றனர். நாமும் 3 முறை சுற்றினால் போதும் என்று நினைத்துச் சுற்றி வருதல் கூடாது. கோவில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் என்ற முழு விவரத்தை சரியாக நாம் தெரிந்து கொண்டு சுற்றி வருவது அவசியம்.

சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும் என்பது வாஸ்தவம் தான். ஆனால் நாம் சிவன் கோவிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு. அதனால் நமக்கு இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கக் கூடும். எப்படி எல்லாம் பிரதட்சணம் செய்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

சிவாலயங்களில், கோவிலினுள் இருக்கும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு (நவகிரகங்களை தவிர), ஆலயத்தின் முன் இருக்கும் கொடிமரத்தின் அருகில் நின்று மூன்று முறை சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும். கோவிலின் மற்ற சன்னதிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கக் கூடாது.

அதன் பின்னர் வெளிப் பிரகாரத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். அப்படி வலம் வரும் போது கொடிமரத்தையும் சேர்த்து வலம் வருவது அவசியம்.

அடி பிரதட்சணம் செய்பவர்கள் பொறுமையாக பிரதட்சணம் செய்ய வேண்டும். பூமியை, அதாவது நிலத்தைப் பார்த்த படி, சிவ நாமத்தை நினைத்த படி செய்ய வேண்டும். பூமி அதிர நடக்கக் கூடாது.

கோவிலின் உட்பிரகாரத்தில் பிரதட்சணம் செய்வதை விட, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பிரதட்சணம் செய்யும் போது அதிக பலன்கள் கிடைக்கும். கோவிலுக்கு வெளியே செருப்பு கழட்டிட்டு போறதுக்கு உண்மையான காரணம் இது தான். வெளிப்புறப் பிரகாரத்தில் கொடி மரத்தையும் சேர்த்து பிரதட்சணம் செய்வது மிக அவசியம். கடைசியாக நவகிரக சன்னதியில் வணங்கி சிவனின் அருளோடு வீடு திரும்பலாம்.

ஆலயங்களை மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் வலம் வரலாம். கோவிலை வேகமாக எண்ணிக்கை கணக்கிற்காக வலம் வருதல் பயனற்றது. நிதானமாக பேசாமல் இறை உணர்வுடன் வலம் வருதல் வேண்டும்.

கோவில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகாரத்தை வேகமாக வலம் வருவார்கள். இது மிகவும் தவறானது. கோவில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகாரத்தை வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்குப் போக வேண்டும் அல்லது அவசரமாக வெளியே கிளம்ப வேண்டும் என்ற நோக்கத்தில், வேக வேகமாக கோவிலை வலம் வருவார்கள்.

ஒரு நிறைமாத கர்ப்பிணி, எவ்வாறு நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும். அப்போது, அந்த தெய்வத்தின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். கதை பேசிக்கொண்டும், சேஷ்டைகள் செய்தபடியும் கோவிலை வலம் வரக்கூடாது. குழந்தைகள் சப்தம் செய்தால், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி, அமைதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வலம் வருவதால், முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகி விடும்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், அனைத்து ஜாதியையும் சேர்ந்தவர்கள் என ஜாதி மதப்பாகுபாடு இன்றி இந்த பிரதட்சண விரதத்தைச்செய்யலாம். ஒரு லட்சம் தடவை பிரதட்சணம் செய்தல் மிக உத்தமம். இயலாதவர்கள் அதில் நான்கில் ஒரு பகுதி 25 ஆயிரம் அல்லது பத்தாயிரம் அல்லது ஓர் ஆயிரம் பிரதட்சணமாவது இந்த நான்கு மாதங்களில் செய்வது மிகுந்த பலனை வாரி வழங்கும். இந்த விரதத்தை வேத வியாசர் தர்மபுத்ரருக்கு கூறியதாக புராணம் கூறுகிறது.

இந்த பிரதட்சணத்தை அருகில் உள்ள கோவிலில் ஸ்ரீ மகா விஷ்ணு, சிவன், அம்மன் ஆஞ்சநேயர் முதலான தெய்வங்களுக்கும் மற்றும் அரசமரம், துளசிச்செடி, பசுமாடு, முதலியவைகளுக்கும் செய்யலாம்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் பிரதட்சணத்தைக் கணக்கிட்டு இந்த நான்கு மாதங்களில் ஒரு லட்சம் அல்லது 10 ஆயிரம் அல்லது ஒரு ஆயிரமாவது பிரதட்சணம் செய்யலாம். இந்த பிரதட்சண விரதத்தால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களில் இருந்து நம்மை விடுவித்து, நமது வாழ்க்கையின் லட்சியத்தை அடைய முடியும்.

Tags:    

Similar News