முக்கிய விரதங்கள்
null

இன்று காரடையான் நோன்பு... விரதம் இருந்து வழிபாடு செய்வது எப்படி?

Published On 2023-03-15 01:58 GMT   |   Update On 2023-03-15 03:50 GMT
  • இந்த விரதத்தை 'சாவித்திரி விரதம்', 'காமாட்சி விரதம்' என்றும் அழைப்பார்கள்.
  • இந்த விரதத்திற்காக காரடை செய்து நைவேத்தியம் படைக்கலாம்.

இன்று (புதன்கிழமை) பெண்கள் காரடையான் நோன்பு இருக்க வேண்டிய தினமாகும். காமாட்சி அம்மனுக்குதான் பெண்கள் காரடையான் நோன்பு இருப்பர். கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைத்து தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க இந்த நோன்பிருந்து பெண்கள் வேண்டிக் கொள்வார்கள். சாவித்திரி விரதம், கவுரி விரதம், காமாட்சி விரதம், மாங்கல்ய நோன்பு உள்ளிட்ட பல பெயர்களால் காரடை யான் நோன்பை குறிப்பிட்டு அழைக்கிறார்கள்.

இந்த நோன்பை பற்றி சொன்னாலே சத்யவான், சாவித்ரி கதை தான் பலரின் நினைவுக்கு வரும். இளவரசி சாவித்திரி, அண்டை தேச இளவரசன் சத்யவான் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நடைபெற்ற கொஞ்ச நாளில் சத்யவானின் பெற்றோருக்கு கண் பார்வை பறிபோய் விட்டது. உடல் நலம் மட்டுமில்லாமல், அவர்களின் தேசத்தையும் இழந்துவிட்டார்கள். இதனால் காட்டில் தன் கணவருடன் சாவித்திரி வாழ்ந்தாள்.

அப்போது சீக்கிரமே தன் கணவரும் இறக்க போகிறார் என சாவித்திரி அறிந்து கொண்டாள். தன் கணவர் உயிரை காப்பாற்ற காமாட்சி அம்மனை நினைந்து மனமுருகி விரதம் இருந்தாள் சாவித்திரி. காட்டில் கிடைத்த பொருள்களால் அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து, வழிபட்டு வந்தாள். சத்யவான் உயிரிழக்கும் நாள் நெருங்கியது. அன்றும் சாவித்திரி வழிபாடு செய்தாள். எம தர்மராஜா சத்யவானின் உயிரை எடுத்துவிட்டு புறப்பட்டார். அவரை தடுத்து கணவரின் உயிரை திருப்பித் தர எமனிடம் மண்டியிட்டு மன்றாடினாள்.

சாவித்திரி இப்படி மன்றாடியது எமனை திடுக்கிட செய்தது. தான் ஒரு சாதாரண மானிட பெண் கண்ணுக்கு எப்படி தெரிகிறோம்? என எமன் குழம்பினார். இந்த பெண் தெய்வசக்தி படைத்தவளோ என எண்ணி, அவளுக்கு பதில் உரைத்தார். இருவருக்கும் வாக்கு வாதம் வந்தது. எமன் சத்யவானின் உயிரை கையில் கொண்டு எமலோகம் சென்றார். உடன் சாவித்திரி துரத்தி சென்றாள். ஒரு மானிட பெண் தன் பூத உடலுடன் எமலோகம் வந்ததை கண்டு மீண்டும் எமன் அதிசயித்து போனார்.

ஆனாலும் சத்யவானின் உயிரை கொடுக்க மாட்டேன் என எமன் பிடிவாதம் செய்தார். ஆனால் சாவித்திரி மனம் தளரவில்லை. அப்போது சத்யவானின் உயிரை தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் என எமன் கேட்க, சாவித்திரி, 'பதிவிரதை நான். எனக்கு புத்திரப்பாக்கியம் வேண்டும். மாமனார், மாமியாருக்கு பார்வைத்திறன், எங்கள் தேசம் மீண்டும் எங்களுக்கே வேண்டும்' என பல வரங்களை சாவித்திரி கேட்டாள்.

அனைத்தையும் தருவதாக கூறி நகர்ந்த எமனை மீண்டும் சாவித்திரி தடுக்க, எமன் குழப்பமடைந்தார். பாதி வரம் தான் தந்ததாக சாவித்திரி கூற, அப்போது தான் எமனுக்கு நினைவுக்கு வருகிறது சாவித்திரி பதிவிரதை என்று சொல்லி புத்திரபாக்கியம் கேட்டது. கணவனின் உயிரை மீட்டு கொண்டு வர சாவித்திரி கேட்ட வரம் அவளின் மதிநுட்பத்தின் சான்று. அவளுக்கு எமனிடன் போய் பேச துணிவு கொடுத்தது தெய்வசக்தி. இதை வியந்த எமன் சத்யவானின் உயிரை திரும்ப கொடுத்தார். கணவரின் உயிரை எமனிடம் போராடி சாவித்திரி மீட்ட நாளையே காரடையான் நோன்பாக கொண்டாடுகிறார்கள்.

மாசி மாதத்தின் கடைசி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் தினத்தில் தான் காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை (புதன்கிழமை) காரடையான் நோன்பு வருகிறது. நாளை காலை 6.29 மணி முதல் 6.47 மணி வரை வழிபாடு செய்ய வேண்டும்.

பெண்கள் கண்டிப்பாக இந்த விரதம் இருக்கவேண்டும். சுமங்கலி பெண்கள் கணவர் நீண்ட ஆயுள் பெறவும், திருமண மாகாத பெண்கள் நல்ல துணை அமையவும் காரடையான் நோன்பு இருப்பார்கள்.

அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜையறையில் காமாட்சி படம் அல்லது ஏதாவது ஒரு அம்மன் படத்திற்கு பூக்கள் வையுங்கள். அவர்களுக்கு பூச்சூட்டி வழிபட வேண்டும். காலை முதலாகவே நோன்பை உபவாசம் இருந்து தொடங்குவது நல்லது.

நம் வீட்டில் உள்ள அம்பாள் படத்திற்கு முன்னால் வெற்றிலை பாக்கு, மஞ்சள் சரடு வைத்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். காமாட்சி விருத்தம் பாடவேண்டும். மஞ்சள் சரடில் 2 மல்லிகை பூ அல்லது ஏதேனும் ஒரு பூ வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். இதனை அம்பாள் படத்தின் முன் வைத்து வழிபட வேண்டும். பின்னர் அக்கயிற்றை கணவரிடம் ஆசி பெற்று, அவர் கையால் கட்டிக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை கணவர் வெளியூரில் இருந்தாலோ, விரதம் இருப்பவர் திருமணமாகாத பெண்களாக இருந்தாலோ வீட்டில் இருக்கும் மூத்தோரிடம் ஆசி பெற்று அந்த கயிரை கழுத்திலோ, கையிலோ நீங்களே கட்டிக் கொள்ளலாம்.

நாளை காரடையான் நோன்பு சரடு (மஞ்சள் கயிறு) கட்டிக்கொள்ள அதிகாலை 5.10 மணி முதல் 6.10 மணி நல்ல நேரமாகும். இந்த நேரத்தில் நோன்பு சரடு கட்டிக் கொண்டால் பெண்கள் நினைத்தது நடக்கும்.

அப்போது பெண்கள், "தேவியே, மஞ்சளுடன் கூடிய இந்த நோன்பு கயிற்றை நான் கட்டிக்கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும்" என்று வேண்டி கொள்ள வேண்டும்.

விசேஷமான இந்த நாளில் தாலி சரடும் கூட மாற்றிக் கொள்ளலாம். இந்த நோன்பிற்காக கட்டிய மஞ்சள் சரடை எப்போதும் அணிந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 3 நாட்கள் அணிந்து விட்டும் கழற்றி விடலாம்.

கார அடை, இனிப்பு அடை ஆகியவை அம்மனுக்கு படைக்கலாம். உருகாத வெண்ணைய்யை காமாட்சி அம்பாளுக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

Tags:    

Similar News