முக்கிய விரதங்கள்
முருகன்

வைகாசி மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்..

Published On 2022-05-17 05:07 GMT   |   Update On 2022-05-17 05:07 GMT
சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கும் காலமே, வைகாசி மாதம். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட வைகாசி மாதத்தின் விழாக்களையும், விசேஷங்களையும் தெரிந்துகொள்வோம்...
சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கும் காலமே, வைகாசி மாதம். அதனால் இதற்கு ரிஷப மாதம் என்ற பெயரும் உண்டு. தமிழ்க் கடவுளான முருகப்பெருமான் அவதரித்த திருநாளான வைகாசி விசாகம், பௌத்தர் அவதரித்த பௌத்த பூர்ணிமா, நரசிம்ம ஜெயந்தி என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட வைகாசி மாதத்தின் விழாக்களையும், விசேஷங்களையும் தெரிந்துகொள்வோம்...

வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு, `மோகினி ஏகாதசி' என்று பெயர். இன்று விரதமிருந்து பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் வசந்தம் உண்டாகும்.

தன்னைச் சரணடைந்த பக்தனைக் காக்க, சிம்ம முகமும் மனித உடலும் கொண்ட நரஹரி ரூபமாய் பெருமாள் `நரசிம்ம அவதாரம்' எடுத்த தினம் நரசிம்மர் ஜெயந்தி. அன்றைய தினம் நரசிம்மரை வணங்கினால் இடையூறுகள் அனைத்தும் விலகி வாழ்வில் நன்மைகள் ஏற்படும். பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம்.  

தேவர்கள் துயர் தீர்க்க, முருகப்பெருமான் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி தினத்தில் அவதரித்தார். எண்ணிய காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் முருகப்பெருமானை வழிபட மிகச்சிறந்த நாள் வைகாசி விசாகம்.  

புத்த பூர்ணிமா, புத்த மதத்தவருக்கு முக்கியமான நாளாகும். புத்தர் பிறந்த தினம், அவர் போதிமரத்தினடியில் தியானமிருந்து ஞானம் பெற்றது, அவர் பரிநிர்வாணம் அடைந்தது என்று முக்கியமான மூன்று நிகழ்வுகள் நடந்தது வைகாசி பௌர்ணமியன்றுதான்.

`நடமாடும் தெய்வம்' என்று மக்களால் போற்றப்பட்ட காஞ்சி மகா பெரியவா, வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். தம்முடைய ஜீவித காலத்திலும், முக்திக்குப் பிறகும் தம் பக்தர்களுக்கு அருள்புரிந்து வரும் காஞ்சி மகானை வழிபட்டு, அவருடைய திருவருளால் அனைத்து நன்மைகளும் பெறுவோம்.

துயரங்கள் அனைத்தையும் போக்கும் விநாயகரை வழிபடுவதற்கு மிகச்சிறந்த நாள் சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைய தினம் விரதமிருந்துதான் தேவர்கள் ஞானம் பெற்றார்கள். சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து தும்பிக்கையானை வழிபட்டால், சங்கடங்கள் எல்லாம் தீர்ந்து, வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.

அக்னி நட்சத்திரம் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. அக்னி பகவான் காண்டவ வனத்தை எரித்துப் பசியாறிய நாள்கள் அக்னி  தோஷமுள்ளவை என்பதால், கோவில்களில் இன்று அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடைபெறும். இந்த தோஷ நிவர்த்தி பூஜையின்போது இறைவனை வணங்கினால் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதிகம்.

வைகாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு வருதிந் ஏகாதசி என்று பெயர். சிவபெருமான் பிரம்மனின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்கிய நாள் இன்று. இன்று விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது ஐதிகம்.

முன்னோர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உகந்த தினம் அமாவாசை நாள். முன்னோர்கள் நினைவாக விரதமிருந்து நீர் நிலைகளில் புனித நீராடி வழிபாடு செய்தால் முன்னோர்களின் ஆசி பெற்று வாழ்க்கை செழிப்படையும் என்பது நம்பிக்கை. குல தெய்வ வழிபாட்டுக்கும் உகந்த தினம்.

முருகப் பெருமான் அவதரித்த வைகாசி மாதத்தில் வரும் சஷ்டி சிறப்பு மிக்கது. இன்று விரதமிருந்து முருகனை வழிபட்டால் முருகனின் அருள் பெற்று, குழந்தைப் பேறு வரமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Tags:    

Similar News