ஆன்மிகம்
சுதர்சன சக்கர யந்திர

சுதர்சன சக்கர யந்திர விரத வழிபாடு

Published On 2021-10-21 05:15 GMT   |   Update On 2021-10-21 05:15 GMT
ஸ்ரீசுதர்சன மகா மந்திரத்தை தானே ஜபிப்பதும், மற்றவர் ஜபிக்கக் கேட்பதும், சுதர்சன யாகம் நடக்குமிடத்தில் இருப்பதும் மிகவும் புண்ணியம் தரக்கூடியது.
சுதர்சன சக்கர யந்திர அமைப்பு இரு வகையானது. செப்புத் தகட்டில் வரி வடிவிலேயே முக்கோணம், ஷட்கோணம் போன்ற கோண அமைப்புகளில் ஸ்ரீசுதர்சன வடிவை வழிபடலாம். இது ஒரு முறை. இன்னொன்று சக்கரத்தில் ஸ்ரீசுதர்சனரின் வடிவை உள்ளடக்கிய விக் கிரக ஆராதனை வழிபாடு.

இந்த இரண்டு வகைகளிலும் சுதர்சனரை வழிபட இயலாமல் போனால், சுதர்சனரை மனக் கண்ணில் இருத்தி, அவரின் பல்வேறு மந்திரங்களை தூய்மையான மனதுடன் சொல்லி வழிபடலாம். உடலும் உள்ளமும் சுத்தமான சூழ்நிலையில் இந்த மந்திரங்களை உச்சரிப்பது, நிறைவான பலனை அளிப்பதோடு மனதுக்கு அமைதியையும் கொடுக்கும்.

பகவான் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரிவதற்காக, சிலை வடிவம் தாங்கி இந்த பூலோகத்தில் தோன்றினார். விக்ரக வழிபாடு முறையில் பகவானை நன்கு அலங்கரித்து அவனது அற்புற அழகிலே லயித்து, அவனது ஆயிரத்தெட்டு நாமாக்களினால் அர்ச்சித்து, ஆராதித்து ஆத்ம சாந்தியைப் பெறுகிறார்கள்.
அதுபோல், பகவான் மந்திர ரூபமாகவும், யந்திர ரூபமாகவும் உருவெடுத்தான். சிலை உருவை வீட்டில் வைத்து வழிபட இயலாதவர்களும் தன்னை வழிபட ஏதுவாக யந்திர உருவம் தாங்கினான் பகவான். அதனால், பக்தி சிரேஷ்டர்கள் பகவானை விக்ர ரூபமாகவும், மகா யந்திரத்தின் ரூபமாகவும், சாளக்கிராம ரூபமாகவும் வழிபடுகிறார்கள்.

யந்திர பூஜையைக் கடைப்பிடிப்போர், ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் தத்துவத்தை மகா யந்திரங்களில் தியானித்து வழிபடுகிறார்கள். மனதைச் செலுத்தி, அதற்கு திருமஞ்சனம், அர்ச்சனை முதலியவற்றால் வழிபட்டு பயன் பெறுகிறார்கள். மகாசுதர்சன யந்திரத்தை முறையாக வழிபடுவோர், எவ்விதமான இன்னல்களுமற்று, சகல சவுபாக்கியங்களுடன், இன்பமாக வாழ்கிறார்கள். ஸ்ரீசுதர்சன உபாசனை வீரம் அளிப்பது. தீர்க்க முடியாத நோய்களும், சுதர்சனரின் கடாட்சத்தால் நீங்கப் பெறும்.

போர்முனையில் வெற்றித் திருமகளின் கடாட்சத்தைப் பெறுவதே, தமது லட்சியமாகக் கொண்ட வீரவாழ்வு வாழ்ந்த பல மாமன்னர்கள், சுதர்சன உபாசனை செய்தவர்களாகவே இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தினசரி அதிகாலையில் குளித்து முடித்து, தூய்மையுடன், நித்திய கர்மாக்களை முடித்து விட்டு, ஸ்ரீசுதர்சன யந்திரம் முன் உட்கார்ந்து கொண்டு ஸ்ரீசுதர்சனரை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஸ்ரீசுதர்சன அஷ்டோத்தரம் சொல்லி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

இவ்விதமான விரத வழிபாட்டினால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். வாழ்க்கையில் எந்த விதமான கஷ்டமும் ஏற்படாது. எடுத்த காரியம் யாவிலும் வெற்றி கிடைக்கும். ஆபத்துகளிலிருந்து விடுபடுவதும், தீராத நோய்கள் நீங்குவதும், சத்ரு நாசமும், சர்வஜன வசியமும், இஷ்ட காரிய சித்தியும் இந்த வழிபாட்டினால் ஏற்படும்.

இதைப்போலவே, பக்தி சிரத்தையுடன் சுத்தமான இடத்திலோ அல்லது பூஜை அறையிலோ அமர்ந்து, ஒரு பஞ்சபாத்திரத்தில் உள்ள புனித நீரில் சில துளசி தளங்களைச் சேர்த்து, வலது கரத்தால் மூடிக்கொண்டு, வலிமை மிக்க சுதர்சன மகா மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறைக்கு மேல் ஜபித்து பகவான் மீது நம்பிக்கை கொண்டு தீர்த்தத்தை நோயுற்றவர்களுக்குக் கொடுத்தால் நோய் தீர்வதை காணலாம்.

ஸ்ரீசுதர்சன மகாமந்திரம் சர்வ வல்லமை பெற்றது. உடனே பலன் தரக்கூடியது. எனவே தக்க பெரியோர்களிடம் உபதேசம் பெற்று, அங்க நியாச, கர நியாச, தியான முறைக ளோடுசரியான உச்சரிப்புடன் முறைப்படி ஜபிக்க வேண்டியது அவசியம்.

ஸ்ரீசுதர்சன மகா மந்திரத்தை தானே ஜபிப்பதும், மற்றவர் ஜபிக்கக் கேட்பதும், சுதர்சன யாகம் நடக்குமிடத்தில் இருப்பதும் மிகவும் புண்ணியம் தரக்கூடியது.
யாகத்துக்குரிய திரவியங்களைக் கொடுக்கலாம். இயலாதவர்கள் பொருளாகவோ, பணமாகேவா யாகத்துரியவர்களிடம் சேர்ப்பிப்பதும் மிகுந்த புண்ணியம் தரும். ஏராளமான நற்பலன்களையும் அளிக்கும்.
Tags:    

Similar News