ஆன்மிகம்
பெருமாளுக்கு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு விரத வழிபாடு ஏன்?

Published On 2021-09-25 01:36 GMT   |   Update On 2021-09-25 08:45 GMT
புரட்டாசி மாதத்தில் புதனையும், இவரின் அதிபதியான மகா விஷ்ணுவையும் விரதம் இருந்து வழிபடுவதால் சனி, ராகு கேதுக்களால் உண்டாம் தோஷங்களை போக்கிக் கொள்ளலாம்.
சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார். கன்னி ராசியின் அதிபதியான புதனின் அதிதேவதை விஷ்ணு. எனவே மகா விஷ்ணுவை புரட்டாசியில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் கூடுதலான பலன்களை பெறலாம்.

புரட்டாசியில் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதால் புதனின் அருளும் சிறப்பாக கிடைக்கும். புத்திகூர்மை, கற்றல், கற்பித்தல் போன்றவற்றுக்கு அதிபதி புதன்.

புதன் பகவான் சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாக பிறந்தவர். சகல கலைகளிலும் வல்லவர். மகா ஞானியாக விளங்குபவர். கிரகங்களில் சுபக் கிரகர் என்பதால் இவரை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு மிகுதியாக அறிவைக் கொடுப்பவர். ஞானமளிப்பவர். வாக்கு சாதுர்யம் அளிப்பவர். தீயகிரகங்களால் உண்டாகும் பீடைகளை நீக்கும் ஆற்றல் உடையவர்.

எனவே புரட்டாசி மாதத்தில் புதனையும், இவரின் அதிபதியான மகா விஷ்ணுவையும் விரதம் இருந்து வழிபடுவதால் சனி, ராகு கேதுக்களால் உண்டாம் தோஷங்களை போக்கிக் கொள்ளலாம். புதனின் நட்புக் கிரகம் சனி. இவரை விரதம் இருந்து வழிபடுவதால் சனிபகவான் தோஷம் குறையும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வெங்கடேசப் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு தரும். திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். புரட்டாசியில் கொண்டாடப்படும் திருப்பதி பிரம்மோற்சவம் குறிப்பிடத்தக்கது. சூரிய உதயத்தில் எழுந்து குளித்து பெருமாள் சன்னதிக்கு துளசி மாலை வாங்கி சென்று வழிபடவேண்டும். இனிப்பும், எள்ளும் கலந்து இடித்து காகத்திற்கும் உணவு அளிக்கலாம். இதன் மூலம் சனி தோஷம் விலகுவதாக நம்பிக்கை.
Tags:    

Similar News