ஆன்மிகம்
அம்மன்

அம்மன் விரத வழிபாட்டுக்கு உகந்த ஆடி மாதம்...

Published On 2019-07-20 06:04 GMT   |   Update On 2019-07-20 06:04 GMT
புரட்டாசி மாதமானது பெருமாளை வழிபடச் சிறப்பாகக் கருதப்படுவது போல் ஆடி மாதம் முழுவதும் அம்மனை விரதம் இருந்து வழிபடச் சிறப்பு நிறைந்த மாதமாகக் கருதப்படுகிறது.
ஆடிச் செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி தினங்களில் பெரும்பாலான அம்மன் கோவில்களில் விரதம் இருந்து பக்தர்கள் பொங்கல் வைத்து, கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடு செய்கிறார்கள். அதேபோல், ஆடி மாதத்தில் அம்மனுக்கு வளைகாப்பு செய்து கோயிலுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல்களைப் பிரசாதமாக வழங்குவதையும் பார்க்க முடியும்.

கிருஷ்ண பரமாத்மாவின் மாமன் கம்ஸன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் குழந்தைகளை எல்லாம் கொன்று குவிக்க, அவளுக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையான கிருஷ்ணருக்கு பதிலாக வேறு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தையை தேவகியிடம் மாற்றி வைக்கிறார்கள். அந்தப் பெண் குழந்தையைக் கொல்ல கம்ஸன் முயற்சி செய்யும்பொழுது அந்தக் குழந்தையானது பவானி அம்மன் தோற்றத்தில் கம்ஸா உன்னைக் கொல்வதற்குப் பிறந்தவன் இப்பூவுலகில் உயிரோடு இருக்கிறான். அவனால் தான் உனக்கு சாவு என்று கூறி மறைகிறது. அந்த பவானி அம்மன்தான் பெரியபாளையத்து அம்மன் என்று கதைகள் கூறுகின்றன.

இது மட்டுமல்லாமல் இந்த அம்மன் அவதரித்தது பற்றிய மற்றொரு கதையும் உண்டு. இப்பொழுது பெரிய பாளையம் கோவில் இருக்கும் இடம் முன்பு மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அந்த இடத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது, பால் கறந்து விற்பது என்ற தொழிலைச் செய்து வந்த ஒருவரிடம் அவர் வளர்த்த மாடுகளில் ஒன்று மட்டும் தினமும் பால் கொடுக்காமல் இருந்தது சந்தேகத்தைக் கிளப்பியது.

அந்த மாட்டை சில தினங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கத் துவங்கினார். அந்த குறிப்பிட்ட பசுவானது மேய்ச்சலை முடித்து விட்டு அருகி லிருக்கும் ஆற்றில் நீரை அருந்தி விட்டு குறிப்பிட்ட ஒரு பாறைக்கு அருகில் சென்று அந்தப் பாறையின் மேல் அனைத்து பாலையும் பொழிவதைக் கண்டார். அந்தப் பாறையில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதைக் கண்டறியும் எண்ணத்தில் கோடாலியால் அந்தப் பாறையை இரண்டாகப் பிளந்தார். அந்தப் பிளவுபட்ட பாறையிலிருந்து மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடையை உடுத்திய பெண் உருவம் ஒன்று வெளிப்பட்டு அந்த இடத்தில் தனக்கு ஒரு ஆலயத்தை உருவாக்கினால் அவர் செய்த பாவங்களில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறி மறைந்தது. அங்கு கட்டப்பட்ட அந்தக் கோவில்தான் பெரியபாளையத்து அம்மன் கோயில் என்றும் கூறப்படுகிறது.

ஆடி மாதத்தில் இக்கோயிலில் ஆடு, கோழிகளை வேண்டிக் கொண்டு அம்மனுக்குப் பலியிடுகிறார்கள். இன்னும் சில பக்தர்கள் தீச்சட்டி எடுப்பது, நெருப்பு மதிப்பது, அலகு குத்திக் கொள்வது போன்ற வேண்டுதல்களையும் செய்கிறார்கள். இக்கோயிலில் ஆடித்திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பெரும்பாலான அம்மன் கோவில்களில் அம்மனுக்கு விதவிதமான அலங்காரங்களைச் செய்து பூஜை செய்கிறார்கள். ஆடி மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமையில் செல்வத்திற்கு அதிபதியான ஸ்வர்ணாம்பிகை அதாவது பார்வதிதேவி அலங்காரத்தை அம்மனுக்கு செய்கிறார்கள். இந்த அலங்காரத்தில் அம்மனை தரிசிப்பவர்களுக்கு எல்லாச் செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று சித்தி சக்திகள் நிறைந்த அங்காளம்மன் அதாவது காளியின் அலங்காரமானது செய்யப்படுகின்றது. இந்த அலங்காரத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் அளவற்ற புத்திக்கூர்மையானது கிடைக்கும் என்பது ஐதீகம்.

மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தைரியத்தை வழங்கும் காளிகாம்பாள் அலங்காரமானது அம்மனுக்கு செய்யப்படுகின்றது. இக்கோலத்தில் அம்மனை வணங்குபவர்களுக்கு வாழ்வில் எவ்விதத் தடைகள் வந்தாலும் அவற்றைப் போராடி வெற்றி கொள்ளும் தைரியம் கிடைப்பதோடு சிறந்த உடல் நலமும் அமையப்பெறும்.

நான்காவது வெள்ளிக்கிழமையில் காமாட்சி அம்மனை காஞ்சீக்கும் சென்றே தரிசிக்கலாம் அல்லது காமாட்சி அலங்காரம் செய்யப்பட்ட அம்மனை தரிசித்தாலும் சிறப்பே. சக்தி அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் அம்மனை தரிசிப்பதன் மூலம் வாழ்வில் துர்சக்திகள் விலகி அமைதி ஏற்படும்.

ஐந்தாவது வெள்ளிக்கிழமை லஷ்மியை தரிசிப்பதன் மூலம் குடும்பத்தில் உடல் ஆரோக்கியம், செல்வம் மற்றும் அனைத்து மங்களங்களும் உண்டாகும். இவை மட்டுமல்லாமல் அர்த்தநாரி அலங்காரம், மதுரை மீனாட்சி அலங்காரம், ஆண்டாள் அலங்காரம், பராசக்தி அலங்காரம் என்று பலவிதமான அலங்காரங்களை அம்மன் கோவில்களில் செய்கிறார்கள்.
Tags:    

Similar News