ஆன்மிகம்
விஷ்ணு

செல்வம் அருளும் விஷ்ணு விரத வழிபாடு

Published On 2019-07-05 07:20 GMT   |   Update On 2019-07-05 07:20 GMT
விஷ்ணு செல்வத்திற்குரிய சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவர் என்பதால் பெருமாளுக்கு விரதங்கள் பூஜைகள் வழிபாடுகள் செய்பவர்களுக்கு செல்வ சேர்க்கை உண்டாகும்.
விஷ்ணு வழிபாடு செய்ய நினைப்பவர்கள் தங்கள் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிலும் தூய்மை காத்து வழிபாடு செய்வதால் விரும்பிய பலன்களை அடைய முடியும். மேலும் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றுவது, திருமஞ்சணம் செய்தல், வஸ்திரம் சாற்றுதல் போன்ற பரிகார வழிபாடுகள் செய்வதால் நமது வாழ்வில் மங்களங்கள் அனைத்தும் உண்டாகும்.

வருடத்தில் எல்லா தினங்களும் விஷ்ணுவை விரதம் இருந்து வழிபாட்டிற்குரிய தினங்களாக இருக்கிறது. ஆனபோதிலும் வாரந்தோறும் வருகின்ற புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வீட்டில் பெருமாளுக்கு வாசமிக்க மலர்கள் சாற்றி ஏதேனும் இனிப்பு உணவுகளை நைவேத்தியம் வைத்து, பெருமாள் மந்திரங்கள் துதித்து வழிபடுவது பலன்களை விரைவாக கொடுக்க வல்லதாகும். பௌர்ணமி தினங்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பானதாகும்.

பெருமாளுக்கு விரதம் மற்றும் வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் இருக்கிறது. இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்படுவதை காணலாம். பொதுவாக பெருமாளுக்கு விரதமிருக்கும் போதும், பூஜைகள், வழிபாடுகள் செய்யும் போதும், பூஜை செய்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் புலால் உணவு, போதை வஸ்துக்களை அறவே தவிர்த்து விரதம் மேற்கொள்வது நல்லது.

விஷ்ணு செல்வத்திற்குரிய சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவர் என்பதால் பெருமாளுக்கு விரதங்கள் பூஜைகள் வழிபாடுகள் செய்பவர்களுக்கும், விஷ்ணு காயத்ரிமந்திரம் துதிப்பவர்களுக்கும் செல்வ சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் நஷ்ட நிலை நீங்கி, லாபங்கள் பெருகும். சொந்த வீடு, வாகனம் போன்ற யோகங்கள் அமையும். வறுமை நிலையை நீங்கும். வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தும் அமைப்பு உருவாகும். வெளிநாடு சென்று செல்வம் சேர்க்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல உணவு, புத்தாடைகள், வாசனை திரவியங்கள் போன்ற சுகபோக பொருட்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களும், பெண்களும் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள். வாழ்க்கைத் துணையால் தனலாபம் ஏற்படும் யோகமும் சிலருக்கு உண்டாகும்.
Tags:    

Similar News