ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

சோதனைகளை எதிர்கொள்வது எப்படி?

Published On 2020-12-15 07:06 GMT   |   Update On 2020-12-15 07:06 GMT
அல்லாஹ்வையன்றி உங்களுக்கு யாதொரு பாதுகாவலுமில்லை. உதவி செய்பவனும் இல்லை” என்று திருக்குர்ஆன் (29:22) ஆணித்தரமாக குறிப்பிடுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும், எப்பொழுதுமே தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. நீரோடை, கரடுமுரடான இடங்களில் தவழ்ந்து தான் சமவெளிகளை அடைய முடியும். வயல்வெளிகளை உயிர்ப்பிக்க முடியும். அது போன்று தான், மனிதன் தன் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கித்தான் தன் இலக்கை அடைய முடியும். கடினமான முயற்சிகள் இல்லாமல் தொடங்கிய காரியங்களில் வெற்றிகள் ஈட்டப்படுவதில்லை.

உலகின் பல பாகங்களில் மனிதர்கள் சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏதோ வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். அந்த வெற்றிக்கு நாம் வழங்கும் வெகுமானமும், சன்மானமும் தான் நாம் எதிர்கொண்டிருக்கும் சோதனைகள்.

இஸ்லாமிய தத்துவம் மனிதர்களை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறும் போது, “மனிதர்கள் தம்வாழ்வில் ஏற்றஇறக்கங்களை, மேடுபள்ளங்களை, வறுமைசெழுமை இப்படி எல்லா நிலைகளையும் ஒருசேர கருதவேண்டும்” என்று சொல்கிறது. அதுமட்டுமல்ல இந்தநிலைகளில் எல்லாம் இறையச்சம் மேலோங்கி நிற்க வேண்டும் என்றும் போதிக்கிறது.

இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை பலர் இந்த ஒரு கருத்தை உள்வாங்கிய நிலையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். “இறைவன் ஒருவனே, அவன் தான் அல்லாஹ், அவனுக்கு இணைதுணை இல்லை, அவனே உலகம் அனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்பவன். முஹம்மது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்” என்று சொல்லி விட்டால் மட்டும் போதும். அல்லாஹ் வாக்களித்த படி சொர்க்கம் நமக்கு கிடைத்து விடும் என்று சிலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல இஸ்லாமிய வாழ்வு நெறிகளுக்கு முரணாகவும் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

“ஈமான் கொண்டோம், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம்” என்பது இஸ்லாமிய இல்லத்தின் நுழைவு வாசல் மட்டுமே. அதற்குள் இருப்பதுதான் வாழ்வு நெறி தத்துவங்கள். காலை புலர்ந்ததிலிருந்து, அந்தி சாயும் வரை மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நிலைப்பாட்டையும் செவ்வனே செய்யச் சொல்வது இஸ்லாம்.

வியாபார தர்மங்கள், அளவுநிறுவைகளில் நியாயங்கள், வட்டியில்லா வாழ்வியல், உறவுகளின் அரவணைப்பு, பக்கத்து வீட்டாரோடு பங்களிப்பு, மாற்றுமத சகோதரர்களோடு இணக்கங்கள், கற்பு நெறி காத்தல், பாவங்களை தவிர்த்தல், பார்வைக்கும், கேள்விகளுக்கும், கரங்களுக்கும், எண்ணங்களுக்கும் கற்பு நெறியை நிர்ணயம் செய்தல் என ஒவ்வொரு நிலைகளிலும் தவறுகளைத் தவிர்த்து, குற்றங்கள் நிகழாது காத்துக் கொள்ளும் போது சோதனைகள் நம் வீட்டு வாசல் கதவுகளைத் தட்டுவதற்கு சிறிது யோசனை செய்யும். இந்த நிலைகள் மாறும் போது சோதனைகள் நம்மை சூழ்வதை தவிர்க்க முடியாது.

அருள்மறை குர்ஆன் இதைப்பற்றி பேசும்போது, “மனிதர்கள் ‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம்’ என்று கூறினால் மட்டும் போதுமானது. அதனைப் பற்றி அவர்கள் சோதிக்கப் படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனரா?” (திருக்குர்ஆன் 29:2) என்று இடித்துரைக்கின்றது.

எனவே, இறைவனை நம்பிக்கை கொண்டால் மட்டும் போதுமானது என்ற நிலைமை மாற வேண்டும்.

அதுபோல, “பாவங்கள் அற்ற சமூகத்தை நாம் ஒருபோதும் அழிப்பதில்லை” என்றும் அல்லாஹ் கூறுகிறான். “மனிதர்கள் செய்யும் பாவங்களால் மட்டுமே அவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்” என்கிறது திருக்குர்ஆன்.

“அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் செய்து கொண்ட பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம்” (திருக்குர்ஆன் 29:40)

எனவே நாம் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டால், உடனே நம்மை நாம் சுய பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும். நம்மிடம் மிகைத்திருக்கின்ற பாவங்கள் என்ன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதனை அறிந்து தவிர்க்கும் போது சோதனைகள் விலகி விடும்.

சோதனைகள் இரு வகைப்படும். அவை: தனிப்பட்ட சோதனைகள் மற்றும் ஒட்டுமொத்த சோதனைகள். தனிப்பட்ட முறையில் அல்லதுஒரு குடும்பத்திற்கு ஒரு நாட்டிற்கு ஏற்படுகின்ற பேராபத்துகளுக்கு காரண காரியங்கள் வேறு வேறாகத்தான் இருக்கும். தனிப்பட்ட தன் சுயநலத்திற்காக ஒருவன் செய்யும் பாவத்தின் வீரியம், ஒட்டுமொத்த சமூகம் செய்யும் பாவத்திற்கு குறைந்ததாகத் தான் இருக்க முடியும். ஒருவன் திருந்தி பாவத்திலிருந்து வெளியேறுவது எளிது. அதே சமயம் ஒரு சமூகத்தை விடுவிப்பது என்பது கடினமாகத் தான் இருக்கும். சமீபத்திய சமூகத்தில் ஏற்பட்டுள்ள கலாசார சீர்கேடுகள், தான் செய்வது எதுவும் தப்பே இல்லை என்ற நிலைப்பாட்டில் வாழும் சமூகம் சோதிக்கப்படாமல் எப்படி இருக்க முடியும்?

இந்த சமூகத்தினர் நல்வழி பெற இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டு கை ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை. இதைத்தான் திருக்குர்ஆன் இவ்வறு குறிப்பிடுகிறது:

“உண்மை நம்பிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை பொறுமையுடன் சகித்துக் கொண்டு தங்கள் இறைவனையே நம்பி இருப்பார்கள்”. (திருக்குர்ஆன் 29:59)

எனவே, இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட சோதனை நீங்க வேண்டுமானால் நீங்கள் எந்த முயற்சியில் வேண்டுமானாலும் ஈடுபடலாம். ஆனால், அல்லாஹ்விடம் இறைஞ்சுதலை சமர்ப்பிப்பது மட்டுமே நமக்கு வெற்றியைத் தரும்.

பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்” என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் பரவலாக சொல்லப்பட்டுள்ளது. பொறுமை என்ற உன்னத நிலையை அவ்வளவு எளிதாக அடைந்துவிட முடியாது. அதற்கு அபரிமிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் எனும் போது வேறு யாரால் நமக்கு கெடுதியை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்குமானால் பொறுமையை எளிதாக கையாளலாம்.

“அல்லாஹ்வையன்றி உங்களுக்கு யாதொரு பாதுகாவலுமில்லை. உதவி செய்பவனும் இல்லை” என்று திருக்குர்ஆன் (29:22) ஆணித்தரமாக குறிப்பிடுகிறது. எனவே, நம் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஒருவனிடமே சமர்ப்பிப்போம். சோதனைகள் நீங்கப்பெற்று வெற்றி அடைவோம். அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக! ஆமீன்!

மு.முகமது யூசுப், உடன்குடி.
Tags:    

Similar News