ஆன்மிகம்
இஸ்லாம் தொழுகை

சகோதரத்துவத்தை மலரவைக்கும் ஈகைத்திருநாள்

Published On 2020-05-25 04:43 GMT   |   Update On 2020-05-25 04:43 GMT
ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியமக்களின் இன்றியமையாத நன்நாள். இந்த பண்டிகை சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இந்த உலகில் பரப்பும் நோக்கில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியமக்களின் இன்றியமையாத நன்நாள். இந்த பண்டிகை சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இந்த உலகில் பரப்பும் நோக்கில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதயம் மலர்ந்து வாழ்த்துகளை சொல்லும் இந்த நாளில் உள்ளங்கள் மட்டுமின்றி, அவர்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சி மலர்ந்து காணப்படும். கோவை மாவட்டத்திலும் இந்த திருநாளின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த திருநாளை இன் முகத்தோடு வரவேற்று தங்களின் ஈகைக்குணத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த திருநாளை கொண்டாடும் வேளையில், இது குறித்து இஸ்லாம் மார்க்க அறிஞர்கள் சிலர் கூறியதாவது:- இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. அப்படியான நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை முறையில் ஈகைத் திருநாளாக ரம்ஜான் பண்டிகையும், மற்றும் தியாகத் திருநாள் என்கிற பக்ரீத் பண்டிகையும் ஆண்டுதோறும் இஸ்லாம் மார்க்கத்தில் பெருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ரமலான் சிறப்புகள் முக்கியமானது. இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு.

அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தைப் பொறுத்தவரை எல்லா இஸ்லாமியர்களுக்குமே, அல்லாவை அதிகம் நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும் இருப்பதால், ஒரு சிலர் தவிர அனைவருமே நோன்பு இருக்க என்றுமே தவறுவதில்லை. தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே ரமலான் மாதத்தில் முக்கியமானது.

அப்படி இருக்கும்பொழுதுதான், மனது தூய்மையை நாடும் என்பது அதன் மறைபொருளாக இருக்கிறது. அதாவது அதிகாலை முதல், மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல், பிற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்ற தத்துவதை உணர்த்துகிறது. ரமலான் நோன்பின் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல்பிறை தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் ரம்ஜான் கொண்டாடப்படும்.

சவுதி அரேபியா, கத்தார், பக்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் ரம்ஜான் கொண்டாடிய மறுநாள்தான் இந்தியாவில் ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் சிறப்பு தொழுகைகளுடன் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகவே உலக சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை மலரவைக்கும் ஈகைத்திருநாள் அனைவரது இதயங்களையும் இணைக்கட்டும். உலக அச்சுறுத்தல்கள் அனைத்தும் அகன்று போகட்டும். உலகம் முழுவதும் நன்மைகள் பெருகட்டும். உலக மக்கள் அனைவரும் வழக்கம்போல் தங்களது பணிகளை செய்து, பிறருக்கு பகிர்ந்து கொடுக்கும் நல்ல மனம் உருவாகட்டும். நாட்டில் செழிப்பும், மேன்மையும் உருவாகட்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News