ஆன்மிகம்
இஸ்லாம்

இறையச்சத்தால் இணைவோம்

Published On 2020-03-27 05:14 GMT   |   Update On 2020-03-27 05:14 GMT
அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்பதற்கு ஏற்ப நாம் ஒற்றுமையுடனும், பொறுமையுடனும் என்றும் செயல்பட்டால் இறையருளால் வெற்றி நம்மை தேடிவரும்.
ஒருமுறை அண்ணல் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் இரவின் ஒரு பகுதியில் மிகநீண்ட நேரம் தொழுதவர்களாகவும், கண்ணீர் விட்டு அழுது பிரார்த்தனை செய்தார்கள்.

இதைக்கண்ட நபித்தோழர் ஹம்பாஹ் பின் அர்ஹம் (ரலி) அவர்கள் நபிகள் பெருமானாரை நோக்கி, “கண்மணி நாயகமே! நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள். இறைவனிடம் இருகரம் ஏந்தினாலே போதுமானது. ஆனால், நீங்கள் இத்தனை சிரமம்எடுத்துக்கொள்வதேன்?” என வினவினார்கள்.

ஏறிட்டு நோக்கிய அண்ணலார், “அர்ஹமே! நான் இன்று அல்லாஹ்விடம் மிக முக்கியமான மூன்று கோரிக்கைகளை கேட்டேன். இரண்டை ஒப்புக்கொண்ட அல்லாஹ் ஒன்றை முற்றிலுமாக மறுத்து விட்டான்” என்றார்கள்.

“அப்படி என்ன துஆவை நீங்கள் கேட்டீர்கள்?” என்று அர்ஹம் (ரலி) அவர்கள் கேட்க, பெருமானார் (ஸல்)அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

“யா அல்லாஹ்! என்னுடைய உம்மத்தை மற்ற நபிமார்கள் உம்மத்தைப் போல் அவர்களின் பாவச்செய்கைகளின் மிகைப்பால் ஒட்டு மொத்தமாக அழித்துவிடாதே” என்றேன். அல்லாஹ்வும் ஏற்றுக்கொண்டுசம்மதித்தான்.

“யா அல்லாஹ்! என்னுடைய இந்த பலவீனமான கூட்டத்தினர் மீது எதிரிகளை ஒட்டுமொத்தமாக சாட்டிவிடாதே” என்றேன். அதனையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்.

“மூன்றாவதாக, என்னுடைய இந்த உம்மத்தை மனமாச்சர்யங்களாலும் மனமுரண்பாடுகளாலும் தர்கித்து, ஒற்றுமை இழந்து சிதறி விட செய்யாதே!” என்றேன். அல்லாஹ் அந்த கோரிக்கையை மட்டும் ஏற்க மறுத்து விட்டான். அதனால் தான் நான் மனம் வேதனையுற்றவனாக என் உம்மத்தின் எதிர்கால நிலையை எண்ணி நிலை குலைந்துள்ளேன்” என்றார்கள்.

ஒற்றுமை என்பது உணர்வுப்பூர்வமாக ஒவ்வொரு தனிப்பட்டவரும் தம் விருப்பு வெறுப்புகளை விலக்கி, விட்டுக்கொடுத்து உருவாக்க வேண்டிய ஒரு பாசப் பிணைப்பு. அதனால் தான் அருள்மறை அல்லாஹ்வின் கட்டளையை இப்படிச் சொல்லிக்கொடுக் கின்றது.

“நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம்”. (திருக்குர்ஆன் 3:103)

வேற்றுமைகளால் வீழ்ந்து விட்ட பல சாம்ராஜ்யங்கள் பின்னர் ஒன்று பட்ட எழுச்சியினால் மீண்டும் உயிர்பெற்ற இஸ்லாமிய சரித்திர வரலாறுகள் எத்தனையோ நமக்குபாடங்களைப் புகட்டிக் கொண்டிருக்கின்றன.

உஹது போர் உச்சகட்ட நேரம் கிட்டத்தட்ட வெற்றிக்கனியைப் பறித்தாகிவிட்டது. கணவாயின் பிரிவில் காவலர்களாய் நின்ற 70 வீரர்களுக்குள்ளே சலசலப்பு. போர் முடிந்து விட்டது யுத்த களத்தில் உள்ள பொருட்களைச் சேர்ப்போம் என்று ஒரு பிரிவினர் கூறினார்கள். நபி அவர்களிடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை நாம் இந்த இடத்தை விட்டு அசையக்கூடாது என்று இன்னொரு பிரிவினர் கூறினர். இருப்பினும் பலர் நபியின் உத்தரவை மறந்து ஓடிச்சென்றனர். கணவாயில் பெரும்வழியைக் கண்ட எதிரிப் படையினர் மீண்டும் வந்து போர்வீரர்களை பின் புறத்திலிருந்து தாக்கினர். வெற்றியின் பாதை மாற்றப்பட்டுவிட்டது. விளைவு அண்ணலார் அதிகளவில் பாதிக்கப்பட்டார்கள். அருமை சஹாபா ஹம்ஸா (ரலி) அவர்களின் உடல் சின்னாபின்னமாக சிதறடிக்கப்பட்டது. ஒரு சின்ன கருத்து வேற்றுமையால் எத்தனைப் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியது இருந்தது.

காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் சிறந்த தளபதி. பல போர்களில் தளபதியாக இருந்து பல நாடுகளை வென்றெடுத்தவர்கள். அவர் போருக்குச் சென்றால் வெற்றிக்கனியை நிச்சயமாக பறித்து வருவார் என்ற எண்ணம் வீரர்கள் மத்தியில் பிரபலமானது.

அந்த எண்ணம் அல்லாஹ்வை மறந்து காலித் பின் வலீத் (ரலி) மீது நம்பிக்கையை அதிகரித்து விடும் ஆபத்தை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள், ஒரு கடுமையான போரின் மத்தியில் தளபதிக்கு ஓலை அனுப்புகிறார்கள்.

“இந்த ஆணை உங்கள் கையில் கிடைக்கும் போது உங்கள் தளபதி பொறுப்பை அபூ உபைதா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர் படையில் ஒரு சிப்பாயாக நீங்கள் போரில் கலந்து கொள்ளவேண்டும்”.

வீரர்களின் நம்பிக்கை படைத்தவனிடமிருந்து படைப்பினங்கள் மீது சென்று விடலாகாது. வெற்றியைத்தருவது அல்லாஹ் மட்டுமே என்ற நம்பிக்கை தான் அவர்களிடம் மேலோங்க வேண்டும். போரில் தோல்வி கிடைக்கலாம், தவறில்லை. ஆனால் நம்பிக்கையில் சோரம் போகலாகாது என்பதை வலியுறுத்தவே அந்த ஆணையை அனுப்பினார் உமர் (ரலி) அவர்கள்.

சிப்பாய்கள் இரு பிரிவினராக சிதறத் தொடங்கினர். சிலர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை அணுகி, “எப்படிப்பட்ட வீரர் நீங்கள்? அபூ உபைதாவின் கீழ் சிப்பாயாக செயலாற்றுவதா? வேண்டாம். நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம். கலீஃபாவின் ஆணையை புறக்கணியுங்கள். நாம் போரில் வெற்றிபெற்றால் கலீஃபா மனசாந்தி பெறுவார்” என்றார்கள்.

காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், “இது கலீஃபாவின் ஆணை. காரணம் இல்லாமல் இருக்க முடியாது. என்னிடம் தர்கித்து படையை பிளவுபடுத்த வேண்டாம். நாம் பலவீனப்பட்டு விடுவோம். நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன். அபூ உபைதா (ரலி) அவர்களே இனிமேல் நம்படையின் தளபதி” என்று மிக தீர்க்கமாக சொன்னார் காலித் பின்வலீத் (ரலி).

போர் தொடர்ந்தது காலித் பின் காலித் (ரலி) சிப்பாயாய் போர் புரிந்தார்கள். அன்றைய தினம் படை வீரர்கள் பிளவுபடாமல் ஒன்றிணைத்ததால் வெற்றிக்கனியை மிக எளிதாக பெற்றார்கள்.

நான் தான் பெரியவன் என்று கலீஃபாவின் கட்டளையை மறுத்திருந்தால், இன்று வரலாறு தோல்வியை பதிவு செய்து இருக்கும். வரலாற்றில் கறை படிந்திருக்கும்.

அல்லாஹ் சொல்கிறான்: “அன்றி, நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்ப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் சக்தி (ஆற்றல்) போய்விடும். ஆகவே, நீங்கள் (கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர் களுடன் இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 8:46)

ஆனால் இன்று உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. ஒற்றுமையின்மையால் மக்கள் தொகையில் அதிகம் இருந்தும் சிதறி சின்னாபின்னமாகி இழப்புகளை சந்தித்து பலவீனப்பட்டுள்ளோம்.

சிங்கத்தை விரட்டிய மாட்டு மந்தையைப் போல், வலையில் பிடிபட்டும் ஒன்றாய் பறந்து வேடனை ஏமாற்றிய புறாக் கூட்டத்தைப் போல நாம் ஒன்று பட்டால் மட்டுமே உயர முடியும் என்பது காலத்தின் கட்டாயம். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்பதற்கு ஏற்ப நாம் ஒற்றுமையுடனும், பொறுமையுடனும் என்றும் செயல்பட்டால் இறையருளால் வெற்றி நம்மை தேடிவரும்.

மு.முஹம்மது யூசுப், உடன்குடி.
Tags:    

Similar News