நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (செவ்வாய்க் கிழமை) மாலை தொடங்கி நடக்கிறது. சந்தனக்கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு தாரை, தப்பட்டை உள்ளிட்ட வாத்திய முழக்கங்களுடன் புறப்படுகிறது. அப்போது சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தனக்கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்து செல்கின்றன. சந்தனக்கூடு ஊர்வலம் நாகை புதுப்பள்ளி தெரு வழியாக யாஹூசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, சர்அகமது தெரு உள்ளிட்ட தெருக்களில் பவனியாக செல்லும்.
பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை சந்தனக் கூடு சென்றடையும். தொடர்ந்து அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதி பின்னர் நாகூர் பெரியகடை தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, மியான் தெரு, ரெயிலடி தெரு, நூல்கடை தெருவிற்கு வந்து அங்குள்ள பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தனக் குடத்தை வாங்கி கூட்டில் வைத்து மினரா வடப்புற தெரு, அலங்கார வாசல், செய்யது பள்ளி தெரு வழியாக சந்தனக்கூடு நாளை (புதன்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும்.
பின்னர் நியூ பஜார் லைன் வழியாக தர்காவின் கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, அதிகாலை 4.30 மணியளவில் சந்தனக்குடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசப்படும். விழாவையொட்டி நாகூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.