ஆன்மிகம்
இஸ்லாம்

மனிதம் மதிக்கும் மார்க்கம்

Published On 2019-12-20 04:06 GMT   |   Update On 2019-12-20 04:06 GMT
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: “ஓர் அடியான் தன் சகோதரருக்கு உதவும் காலமெல்லாம் இறைவனும் அந்த அடியானுக்கு உதவிக்கொண்டே இருப்பான்”. (நூல்: முஸ்லிம்)
மதம் என்பது மனங்களில் கட்டுண்டு கிடக்கும் தெய்வீகத் தன்மையை பிரித்தெடுத்து உணர்வுகளால் உணரச்செய்யும் உன்னத ஏற்பாடு ஆகும்.

மதமென்பது தனிமனித வாழ்வில் ஊடுருவி மனிதனின் செயல்பாடுகளை நெறிப்படுத்தும்போதுதான் மார்க்கமாக சாத்தியம் பெறமுடியும். அந்த மார்க்கம் உலகின் இயற்கைக்கும் வாழ்வுக்கு இசைந்ததாக சட்ட திட்டங்களை வகுத்து அளித்திட வேண்டும்.

இந்த வகையில் இஸ்லாம் மனித வாழ்க்கைக்கு இசைந்ததாகவும், மனிதம் மதிக்கும் மார்க்கமாகவும் திகழ்கிறது. இஸ்லாத்தின் ஒவ்வொரு சட்டமும் மனிதர்களை சமத்துவ உரிமையின் கீழ் கொண்டுவருகிறது. அதே சிந்தனையுடன் ஓரிறையின் முன்னிலையில் அவனுக்கு மட்டுமே சிரம் தாழ்த்துமாறு வேண்டுகிறது.

ஆகவேதான் ஏக இறைவன் தனது திருமறையில் (16:51,52) இவ்வாறு கூறுகின்றான்:

“அல்லாஹ் கட்டளையிடுகின்றான்; ‘இரண்டு கடவுளரை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். இறைவன் ஒரே ஒருவன்தான், எனவே, எனக்கு அஞ்சுங்கள்’. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்கே உரியவையாகும். மேலும், அவனுடைய தீன் (நெறி) மட்டுமே (இந்தப் பேரண்டம் முழுவதிலும்) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறிருக்க அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களுக்கு நீங்கள் அஞ்சுவீர்களா?”

ஒரு மார்க்கம் அதன் சிறப்பான சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டுமென்றால் முதலில், மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சீர்திருத்தக் கருத்துடனும் கட்டமைப்புடனும் களமிறங்க வேண்டும். இந்த வகையில்தான், மனிதத்தைத் தடம் பிறழச் செய்யும் தீண்டாமையை இம்மார்க்கம் முற்றிலும் தடை செய்துள்ளது.

தொழில் சார்ந்த அடை மொழிப் பெயர்களோடு பல பிரிவுகள் இருக்கலாம். மார்க்கச் சிந்தனையில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் தடம் பதிக்கலாம். ஆயினும் மனிதனை மனிதனே மதிக்காத தீண்டாமை ஒருபோதும் இருத்தல் கூடாது.

ஆகவேதான் தீண்டாமையை தகர்த்தெறியும் காரியங்களில் இந்த மார்க்கம் கடுமையைக் கையாண்டுள்ளது. மனிதர்கள் அனைவரும் தொப்புள் கொடி உறவுகளே என்று நன்மாராயம் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு சென்றபின் முதல்கட்டமாக தீண்டாமையின் செருக்கினால் பிளவுற்று இருந்த அவ்ப் மற்றும் கஸ்ரஜ் எனும் குலத்தாருக்கு இடையில் சகோதர உறவை ஏற்படுத்தினார்கள். பின்புதான் தனது ஏகத்துவப் பணியை தொடங்கினார்கள்.

இஸ்லாமிய மார்க்கம் மனிதத்தை மதிக்கும் தன்மையை மிகப்பெரும் கடமையாகவே கருதுகிறது. சமூகக் கட்டமைப்பை சீர்குலைக்கும் சீர்கேடுகளிலிருந்து மக்களை விடுவித்து, நற்பண்புகளை நிலை நாட்டுவதுதான் நபிமார்களின் தலையாய பணியாக விளங்கியது. அதுவே ஏகத்துவ பணியாகவும் திகழ்ந்தது.

இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்கள், ‘அளவுகளில் மோசடி செய்யும் சமூகத்தை சீர்திருத்தம் செய்வதற்காக அனுப்பப்பட்டார்கள்’. ஷுஐப் (அலை) அவர்கள் தன் சமூகத்தை நோக்கி இவ்வாறு கூறினார்கள்:

“என்னால் முடிந்த வரை சீர்திருத்தம் செய்யவே நான் விரும்புகின்றேன். மேலும் (நான் ஆற்ற விரும்புகின்ற அனைத்தும்) அல்லாஹ்வின் பேருதவியைப் பொறுத்தே இருக்கின்றன. நான் அவனையே முழுமையாகச் சார்ந்துவிட்டேன். மேலும், (ஒவ்வொரு விஷயத்திலும்) அவன் பக்கமே நான் திரும்புகின்றேன்”. (திருக்குர்ஆன் 11:88)

மனிதர்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளையும் தீண்டாமையையும் களைவதற்காகவே ஏனைய இறைத்தூதர்கள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று திருமறை இயம்புகிறது.

லூத் (அலை) அவர்கள், ‘மனித இயற்கைக்கு மாற்றமான கேடுகெட்ட ஒருபால் உறவில் உறைந்து கிடந்த சமூகத்தை சீர்திருத்தம் செய்ய அனுப்பப்பட்டார்கள்’.

இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘சிலைகளை கடவுளாக்கி அதனூடாக மனிதர்களை அடிமைகளாக்கி அட்டூழியம் செய்து வந்த கொடுமைக்கார அரசர்களை நேர்வழிப்படுத்துவதற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்’.

உயர் ஜாதி, கீழ் ஜாதி என்று மனிதர்களைப் பிரித்து ஏழைகளையும் வறியவர்களையும் கேவலமாகப் பார்த்த சமூகத்தை சீர் செய்வதற்காக இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இஸ்லாம் மனிதத்தை எவ்வாறு கரை சேர்க்கிறது?

பழங்காலம் முதல் இன்றுவரை மனித சமூகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கேடுகெட்ட செயல் மனிதர்களை மனிதர்களே அடிமைகளாகக் கருதும் மனோபாவம்தான்.

ஜாஹிலிய்யா எனும் அஞ்ஞானக் காலத்தில், அடிமைகளில் அதிகம் விலை போகக் கூடியவர்கள் பெண்ணடிமைகளாகத்தான் இருந்தார்கள். அதேபோன்று ஆண் அடிமைகளுக்கு தாங்கள் நாடிய போதெல்லாம் துன்பங்களைக் கொடுத்து அதைப்பார்த்து இன்புறும் பொழுதுபோக்கு சாதனங்களாகப் பயன்படுத்தினார்கள்.

அடிமைத்தனத்தில் ஊறித்திளைத்திருந்த அன்றைய அரேபிய சமூகத்தை மிக விரைவாக வேகமாக அதிலிருந்து இஸ்லாம் விடுவித்தது. விடுதலை செய்யப்பட்ட அடிமைகளையே இஸ்லாமிய அரசின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாய் அமர்த்தி அழகு பார்த்தது இஸ்லாம். இதற்கு பிலால் (ரலி) அவர்களே முதல் சாட்சி.

அதுமட்டுமல்ல, அடிமைப் பெண் தனது எஜமானருக்கு பிள்ளை பெற்றுக் கொடுத்தால் அவள் தானாகவே உரிமை பெற்று விடுகிறாள் என்ற சட்டத்தை வகுத்தளித்து பெண்ணுரிமையை ஊக்குவித்தது இஸ்லாம்.

அபூபக்கர் (ரலி) அவர்களிடம், இஸ்லாத்தை ஏற்கும்போது அவரது சொத்து மதிப்பு 40 ஆயிரம் வெள்ளி நாணயங்கள். அதுவே மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது அவர்களிடம் வெறும் 5 ஆயிரம் வெள்ளி நாணயங்களே இருந்தது. தனது செல்வத்தில் பெரும் தொகையை அடிமைகளை வாங்கி விடுதலை செய்வதற்காகவே செலவழித்தார்கள்.

இன்றைய நவீன காலத்திலும் அடிமைத்தனம் மாறுபட்ட உருவங்களாய் உயிர்பெற்று வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. வாழ்க்கைத் தேவைகளும் வாழ்வாதாரங்களும் சுய உழைப்பின் மூலமாகப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமே தவிர, பாமரர்களையும் வறியவர்களையும் சுரண்டுவதன் மூலமாக அல்ல.

அதேவேளை முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி, தொழிலாளர்களாக இருந்தாலும் சரி ஒவ்வொருவருடைய உரிமைகளும் சரிவர கொடுக்கப்படல் வேண்டும்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வியர்வை உலரும் முன் ஊழியருக்கான ஊதியத்தைக் கொடுத்துவிடுங்கள்”. (நூல்: இப்னு மாஜா)

ஏகத்துவ மார்க்கமென்பது ஓரிறை வணக்கத்தை முன்னிறுத்தி, மறுமை வாழ்வுக்காக தமது வாழ்வியல் சந்தர்ப்பங்களை வடிவமைத்திட போராடும் நலன் விரும்பியாகும். மனிதம் காத்திட உதவும் கருவியாய் இஸ்லாம் திகழ்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: “ஓர் அடியான் தன் சகோதரருக்கு உதவும் காலமெல்லாம் இறைவனும் அந்த அடியானுக்கு உதவிக்கொண்டே இருப்பான்”. (நூல்: முஸ்லிம்)

மனிதம் மதிப்போம், வறியவர்களுக்கு உதவுவோம். அடிமைத்தனம் எந்த ரூபத்தில் வந்தாலும் சரியே அதனை அகற்றிட பாடுபடுவோம். அவ்வாறாயின் இறை உதவி காலமெல்லாம் நமக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

முஹம்மது பைஜ், திருச்சி.
Tags:    

Similar News