ஆன்மிகம்
திசையன்விளை ஆத்தங்கரை பள்ளிவாசல்

ஆத்தங்கரை பள்ளிவாசலில் நாளை கந்தூரி விழா தொடங்குகிறது

Published On 2019-11-23 04:35 GMT   |   Update On 2019-11-23 04:35 GMT
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), ஹசரத் சேகு முகம்மது (ஒலி) தர்காவும் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 5.30 மணிக்கு கத்முல் குர்ஆன் தொடக்கம், காலை 7 மணிக்கு பள்ளிவாசல் பே‌‌ஷ் இமாம் முகம்மது யூசுப் ஆலிம் தலைமையில் குர்ஆன் தமாம் செய்தல் நடக்கிறது.

காலை 8 மணிக்கு அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனக்குடம் ஊர்வலமாக எடுத்து தர்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. 9 மணிக்கு கொடி கம்பத்தில் கொடியேற்றப்படுகிறது. 10 மணிக்கு டிரஸ்டிகள் நயாஸ் அகமத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி, அஸீம் அகமத் பிஜிலி ஆகியோர் தர்காவில் சந்தனம் மெழுகுகிறார்கள். மாலை 3.30 மணிமுதல் 5.30 மணிவரை மவ்லூது ‌‌ஷரீப் ஓதுதல், 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை சலாஹூத்தீன் தலைமையில் ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்று மஜ்லீஸ் ஓதப்படுகிறது.

8 மணி முதல் 12 மணிவரை பெட்டைகுளம் காதர்மீரா சாகிப் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி ஹபீலுல் காதர், அதிராம்பட்டினம் ரகுமானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் ‌‌ஷர்புத்தீன் மிஸ்பாஹி, நாகை நீடுர் ஜாமியா மிஸ்பாஹில் ஹூதா பேராசிரியர் அப்துர் ரகுமான் பாகவி, மேலப்பாளையம் செய்யது முகைதீன் சாஹிப் ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் முகம்மது இஸ்மாயில் பாஜில் உஸ்மானி ஆகியோரின் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடக்கிறது. இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிவரை அபுபக்கர், வகிதா குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நன்றி நவிலல் நிகழ்ச்சியும், 5.45 மணிக்கு சிறப்பு துவா ஓதப்பட்டு, 6 மணிக்கு நயாஸ் அஸ்மத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் தலைமையில் நேர்ச்சை வினியோகம் செய்யப்படுகிறது.

கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Tags:    

Similar News