ஆன்மிகம்
சாளக்கிராம கல்

சாளக்கிராம கல்லை தினமும் வழிபடுவதால் தீரும் பிரச்சனைகள்

Published On 2021-09-01 04:53 GMT   |   Update On 2021-09-01 08:16 GMT
திருமாலின் அருவுருவ திருக்கோலமான சாளக்கிராம கல்லை தினமும் வழிபாடு செய்து வருவதனால் ஏற்படும் நன்மைகளையும், பக்தர்கள் அடையும் சிறப்புகளையும் இங்கே பார்க்கலாம்.
சிவபெருமானின் அருவுருவத் தோற்றமாக எப்படி சிவலிங்கம் இருக்கிறதோ, அதே போல் திருமாலின் அருவுருவ திருக்கோலமாக சாளக்கிராமக் கல் பார்க்கப்படுகிறது. சாளக்கிராம கல்லை, கண்ணனாக நினைத்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்தக் கல்லில் இயற்கையாகவே, திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவம் காணப்படுகின்றன. இதுவும் இந்தக் கல்லை புனிதமாகக் கருத ஒரு காரணமாகும்.

இந்த சாளக்கிராம கல்லை தினமும் வழிபாடு செய்து வருவதனால் ஏற்படும் நன்மைகளையும், பக்தர்கள் அடையும் சிறப்புகளையும் இங்கே பார்க்கலாம்.

* சாளக்கிராமத்திற்கு தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தால், அவர்களின் மனம் தெளிவடையும். அப்படி தொடர்ந்து பல வருடங்களாக பூஜித்து வரும் ஒருவன், தானே விஷ்ணுவாகவே மாறிப்போவான் என்கிறது புராணம்.

* சாளக்கிராமத்தில் காணப்படும் உருவங்களின் தரிசனம், கொலை பாவத்தைக் கூட போக்கும் சக்தி படைத்தது. சாளக்கிராம கல்லை தரிசித்தால், பூஜை செய்தால்தான் பலன் என்றில்லை. அந்த கல்லைப் பற்றி நினைத்தாலே, நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி ஓடும்.

* இதனை பக்தியே இல்லாமல் ஒருவர் வழிபட்டாலும் சரி, எதிர்பாராத விதமாக திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் சரி, அவருக்கு சாளக்கிராம வழிபாட்டினால் முக்தி உண்டு.

* சாளக்கிராம பூஜை செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது. இதற்கு சந்தனம் பூசி, மலர் சூடி, தீப மற்றும் தூப ஆராதனைகள் செய்வதோடு, நைவேத்தியமும் படைத்து வழிபட்டு வந்தால், அவர்களுக்கு விஷ்ணு லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

* சாளக்கிராமம் இருக்கும் இடமானது, இறைவன் இருக்கும் இடத்திற்குச் சமமானது. எனவே அங்கிருக்கும் தீவினைகள் எல்லாம் அகன்று விடுவதோடு, சாளக்கிராம பூஜையைச் செய்பவர்கள், சாதாரண மனிதர்களாக கருதப்பட மாட்டார்கள்.

* சாளக்கிராமத்திற்கு பூஜை செய்தால், யாகமும், தானமும் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் ராஜசூய யாகம் செய்தாலும், ஒரு நாள் சாளக்கிராம பூஜை செய்த பலனுக்கு இணையாகாது.

* 12 சாளக்கிராமங்களைக் கொண்டு வழிபாடு செய்தால், 12 கோடி சிவலிங்கங்களை வைத்து, 12 கல்ப காலம் பூஜை செய்த பலன், ஒரே நாளில் கிடைக்கப்பெறும்.

* ஒருவர் முக்தி பெற தீர்த்த யாத்திரையும், யாகமும் அவசியம். ஆனால் சாளக்கிராமை வழிபடுபவர்களுக்கு அது தேவையில்லை. சாளக்கிராமத்திற்கு செய்யும் அபிஷேக தீர்த்தத்தை தலையில் தெளித்து, பருகினாலே புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் வந்துசேரும்.

* விஷ்ணு சகஸ்ரநாமத்தை படித்தபடியே, சாளக்கிராம பூஜை செய்பவர்கள் விஷ்ணுவின் திருவடியை அடைவதாக நம்பிக்கை.
Tags:    

Similar News