ஆன்மிகம்
திருமீயச்சூர்

திருமண தடை போக்கும் திருமீயச்சூர்

Published On 2020-01-14 03:42 GMT   |   Update On 2020-01-14 03:42 GMT
பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்கும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி ஆலயம் திருமண தடை நீக்கும் தலமாக திகழ்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி ஆலயம், பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது.  

இத்தலத்தின் வடக்கு உள் பிரகாரத்தில் சுவாமி கோஷ்டத்தில் உள்ள கல்யாண சுந்தரேசுவரரை, மணமாகாத பெண்கள் பிரார்த்தனை செய்து கொண்டு மலர் மாலை சாத்தி வழிபட்டு வந்தால் விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

சித்தர்களில் முதன்மை பெற்ற அகத்தியர், வில்லவன், வாதாபி என இரு அரக்கர்களை வதம் செய்தார். இதனால் அவருக்கு ‘ஹத்தி தோஷம்’ ஏற்பட்டது. அகத்தியருக்கு அடிக்கடி வயிற்றுவலி உண்டானது. எனவே முருகப்பெருமானிடம் பாபவிமோசனம் வேண்டினார். அவர் ஆலோசனைப்படியே இக்கோவில் இருக்கும் வனத்துக்கு வந்தார். அங்கே காட்டின் நடுவில் ஜோதி லிங்கமாக சிவன் காட்சி தந்தார். அவரை வணங்கி நின்றவுடன் பாவம் அழிந்து சிவஞானம் பெற்றார். அகத்தியர் பூஜை செய்த வில்வ மரத்தை உள்ளே வைத்து ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. அங்கு காணப்படும் வில்வமரம் “அகத்திய வில்வம்” என்றே அழைக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் திருமீயச்சூர் திருத்தலம் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் மெயின் ரோட்டில் பேரளம் என்ற இடத்தில் இடதுபுறம் திரும்பி 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.
Tags:    

Similar News