ஆன்மிகம்
குரு பகவான்

மாங்கல்ய தோஷத்திற்கு சிறந்த பரிகார தலம்

Published On 2020-01-10 05:45 GMT   |   Update On 2020-01-10 05:45 GMT
கல்யாணத்திற்கு காத்திருக்கும் ஆண்களும், பெண்களும் இத்தலம் வந்து, உமாமகேஸ்வரப் பெருமானையும் குரு பகவானையும் தரிசித்து இனிய இல்லற வாழ்வு அமையும் பாக்கியத்தைப் பெறலாம்.
குரு பகவானுக்கு பாப விமோசனம் அளித்ததும், ஒரே கல்லினால் ஆன அபூர்வ ரிஷபாரூடர் சிற்பத்தைக் கொண்டதுமான சிறப்புமிக்க தலமாக விளங்குகிறது, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருலோக்கி அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்.

நாள்தோறும் இருகால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயம், ஒரு விசேஷ பரிகாரத் தலமாகும். ‘பூலோகத்தில் வாழ்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்த, நீ முக்கிய காரணமாக இருப்பாய்’ என குரு பலத்தை குருபகவானுக்கு ஈசன் அருளியதும், ரதிதேவி வேண்டுகோளுக்கிணங்க காமக்கடவுளை மீண்டும் பிறக்கச்செய்து அருள்பாலித்ததுமான ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும். எனவே திருமணத்தடை உள்ளவர்கள், மக்கட்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட அந்தக் குறைகள் விரைவில் நீங்கும்.

மேலும் ஒருவரது ஜாதகத்தில் குரு மறைந்திருந்தாலோ, பகை வீட்டில் இருந்தாலோ, அந்த ஜாதகர் இங்கு வந்து இறைவனை வணங்கினால், சிவனருளோடு, குருவருளையும் பெறலாம். ரதிதேவி மன்மதனை திரும்பப்பெற்ற தலமாதலால், சிறந்த மாங்கல்ய தோஷ பரிகார தலமாகவும் இது விளங்குகிறது. ஆகவே கல்யாணத்திற்கு காத்திருக்கும் ஆண்களும், பெண்களும் இத்தலம் வந்து, உமாமகேஸ்வரப் பெருமானையும் குரு பகவானையும் தரிசித்து இனிய இல்லற வாழ்வு அமையும் பாக்கியத்தைப் பெறலாம்.

இவ்வாலயம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் திருப்பனந்தாளில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. மேற்கண்ட ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதிகளும் உள்ளன.

நெய்வாசல் நெடுஞ்செழியன்
Tags:    

Similar News