ஆன்மிகம்
பைரவர்

ஆபத்தில் இருந்து காக்கும் பைரவ மூர்த்தி

Published On 2020-01-06 06:50 GMT   |   Update On 2020-01-06 06:50 GMT
கோவில்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்றுபவர் பைரவ மூர்த்தியாவார்.
பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. உலக உயிர்களையெல்லாம் நாம் தானே படைக்கிறோம் என்ற ஆணவம் தலைக்கேறி சிவபெருமானையே கேலி செய்தான். இதனையறிந்த சிவன் பிரம்மனின் ஆணவத்தை அடக்கி உலக மக்களுக்காக தன் அங்கமான சர்வசக்தி படைத்த பைரவரை உண்டாக்கினார்.
பிறகு சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவ மூர்த்தி பிரம்மனின் ஒருதலையைக் கிள்ளி எடுத்தார்.

இப்படி பிரம்மனின் ஆணவத்தை அழித்த இந்த செய்தி அகந்தை கொண்டவர்கள், தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும், தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளிலிருந்தும் நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதையும் உணர்த்தும் மிகப்பெரும் தத்துவமாகும்.

பிரம்மனின் தலையைத் துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவனை பைரவர் வேண்டினார். சிவன் பைரவரை பூலோகத்தில் தோஷம் நீங்க பிட்க்ஷ எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் கூறினார். அவ்வாறு பூலோகம் சென்று பிட்க்ஷபெற்று வருகையில் குடந்தை அருகிலுள்ள திருவலஞ்சுழியில் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம நீங்கிற்று.

பின்பு அங்குள்ள ஸ்வேத விநாயகரை வழிபட்டவுடன் விநாயகர் தோன்றி, “உம் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசு. அது எங்கு சென்று சேர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில் கோவில் கொண்டிருப்பாயாக’’ என அருளினார். பைரவர் அவ்வாறே கிழக்கு நோக்கி சூலாயுதத்தை வீச, அது தற்போதுள்ள சேத்திரபாலபுரம் இடத்தில் விழுந்தது.

அந்த இடத்தில் இருந்த ஸ்வேத விநாயகரை வழிபட்டு அவ்விடத்திலேயே கோவில் கொண்டார். சூலம் விழுந்த இடம் தீர்த்தமாயிற்று. கால பைரவருக்கு சேத்திர பாலகர் என்று பெயர். அவர் பெயரே அந்த ஊருக்கு அமைந்து சேத்திர பாலபுரம் என்று வழங்கலாயிற்று. இந்த சேத்திர பாலபுரம் மயிலாடுதுறை தாலுகா, அருகிலுள்ளது.

இவ்வாறு கோவில்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்றுபவர் பைரவ மூர்த்தியாவார். இதைத் தவிர எல்லைக் காவல் தெய்வமாகவும் இருந்து அருள்பாலிக்கிறார்.
Tags:    

Similar News