ஆன்மிகம்

சருமநோய்களைப் போக்கும் சுந்தராம்பிகை

Published On 2017-12-13 10:21 IST   |   Update On 2017-12-13 10:21:00 IST
நாள்பட்ட சருமநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், திருமழபாடி திருத்தல சுந்தராம்பிகையை வழிபாடு செய்தால் நிவாரணம் கிடைக்கும்.
திருஞானசம்பந்தரும் பாடிப் போற்றிய தலம் திருமழபாடி திருத்தலம். திருமழபாடி தலத்தில் சுவாமி வைத்தியநாதர் என்னும் திருப்பெயர் கொண்டு அருள்கிறார். சந்திரனின் சருமநோயைப் போக்கிய காரணத்தினால், இறைவன் வைத்தியநாதர் என்னும் திருப்பெயர் கொண்டதாகத் தலவரலாறு கூறுகிறது. அம்பிகையின் திருப்பெயர் சுந்தராம்பிகை. 

மேலும், புருஷாமிருகர், மார்க்கண்டேயர், அகத்தியர், பராசரர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இந்தத் தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றனர். சுவாமிக்கு வெள்ளை நிற வேஷ்டியும் சம்பங்கி மாலையும், சுந்தராம்பிகைக்கு மாம்பழ நிறத்து பட்டுப் புடவையும் சிவப்பு ரோஜா மாலையும் சாத்தி வழிபடுவதால், நாம் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

சுந்தராம்பிகை, அழகம்மை என்று அழகு தமிழிலும் அழைக்கப்படுகிறார். சருமநோய்களைப் போக்கும் வரப்பிரசாதி இந்த அம்பிகை. நாள்பட்ட சருமநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பங்குனி மாதம் நான்கு அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இந்தத் தலத்துக்கு வந்து, ஆற்றிலும் கோயில் தீர்த்தத்திலும் நீராடிவிட்டு, ஈரப்புடவையுடன் ஒன்பது முறை அம்பாளை வலம்வந்து, உப்பும் மிளகும் போட்டு வேண்டிக் கொண்டால், நாள்பட்ட சரும நோய்களும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் நீங்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டும் பக்தர்கள், கோயிலில் உள்ள சோமாஸ்கந்தருக்கு வெள்ளை வஸ்திரமும் ரோஜாப்பூ மாலையும் சாத்தி, 11 நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

அரியலூரிலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ளது திருமானூர். திருமானூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருமழபாடி. கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதி உண்டு.

தொடர்புக்கு:

கணேச குருக்கள் (ஆலய அர்ச்சகர்) 85259 38216, 98433 60716

Similar News