ஆன்மிகம்
இயேசு

தோல்விகளை கண்டு சோர்ந்து போய்விடக்கூடாது

Published On 2021-08-14 07:11 GMT   |   Update On 2021-08-14 07:11 GMT
சில நேரங்களில் இந்த இளவரசனை போல நாமும் சிறு, சிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய், நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்துவிடுகின்றோம்.
மோசே கர்த்தருடைய சன்னிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை. பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான். (யாத் 6:12)

பட்டத்து இளவரசன் ஒருவன் எதிரி நாட்டின் மீது போர்த் தொடுக்கப் போகும் பெரிய படைக்கு தலைமை தாங்கி செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக எலி ஒன்று குறுக்கிடவே வாளை எடுத்துக் கொண்டு அதனை வெட்ட துரத்தினான். அவன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் எலி தப்பியோடிவிட்டது. சோர்ந்து போன இளவரசன், கேவலம் ஒரு எலியை கூட வெட்ட இயலாத நான் எப்படி எதிரி நாட்டோடு சண்டையிட்டு வெற்றி பெற போகிறேன் என்று எண்ணி, யுத்தத்திற்கு போகாமல் பின்வாங்கினான்.

சில நேரங்களில் இந்த இளவரசனை போல நாமும் சிறு, சிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய், நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்துவிடுகின்றோம். இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும்படி எகிப்து சென்ற மோசேக்கு தொடக்கத்தில் அந்த மக்களே செவி கொடுக்கவில்லை. எனவே சோர்ந்து போன அவன், இவர்களே எனக்குச் செவி கொடுக்காதபோது, எகிப்தின் ராஜா எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்று தயங்கி நின்றான். ஆனாலும் அதே மோசேயின் முன்னால் தேவன் அந்த நாட்டு மன்னனையே அடங்கிப் போகவைத்தார்.

நாம் பெரிய பலசாலிகளாக இருந்தாலும், சில நேரங்களில் சில சின்ன விஷயங்களில் நாம் தோற்றுப் போய் விடக்கூடும். நாம் மிகப்பெரிய திறமை சாலிகளாக இருந்தாலும், சாதாரண சில காரியங்களில் அந்தத் திறமை நமக்கு கை கொடுக்காமல் போக முடியும். மிக வலிமையான ஆவிக்குரிய நிலைகளை உடைய பலர் சில சின்னக்காரியங்களில், சாதாரண மனிதன் அடையும் வெற்றியைக் கூட அடைய முடியாமல், தோல்வி அடையும் வேளைகள் உண்டு. ஆனாலும் இந்தச் சின்ன தோல்விகள், பெரிய வெற்றிகளுக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல என்பதை முடிவு செய்துவிட முடியாது.

ஏசுவை சிலுவையின் பாதையில் பின்பற்ற விரும்பிய பேதுருவால் அது கூடவில்லை. ஆனாலும் கர்த்தருடைய வேளை வந்தபோது, பேதுரு அதை விட மிகக்கடுமையான சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய பலத்தில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்தான். முதல் தோல்வி, முற்றிலும் தோல்வி என்ற நிலை ஏற்படவில்லை.

சிறிய சபை கூடுகையில் சில நிமிடங்கள் சில வார்த்தைகளை பிரசங்கிக்க வலுவின்றி நின்ற பலர், பிற்காலத்தில் லட்சம் பேர்களுக்கு முன்னால் நின்று பவுலைப் போல தைரியமாகப் பிரசங்கித்திருக்கிறார்கள். ஆம், சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

– சாம்சன் பால்
Tags:    

Similar News