ஆன்மிகம்
தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் உள்ள திரு இருதய பேராலயம் வெறிச்சோடி கிடந்த காட்சி.

பிரார்த்தனை நடைபெறாததால் வெறிச்சோடி காணப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள்

Published On 2021-08-09 09:32 IST   |   Update On 2021-08-09 09:32:00 IST
கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் கிறிஸ்தவ ஆலயங்களில் பிரார்த்தனை நடைபெறவில்லை. இதனால் ஆலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் அனைத்து மத வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு வருகிற 23-ந் தேதி வரை தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தமிழகஅரசு தடை விதித்தது. ஞாயிற்றுக்கிழமைதோறும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

ஆனால் வழிபாட்டிற்கு தமிழகஅரசு தடை விதித்த காரணத்தினால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நேற்று நடைபெறவில்லை. இதனால் கிறிஸ்தவர்கள் வராததால் ஆலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயம், சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயம், தஞ்சை குழந்தை ஏசு திருத்தலம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் பிரார்த்தனை நடைபெறவில்லை.

சில ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் மிக குறைந்த அளவு வந்திருந்து வெளியே நின்று பிரார்த்தனை செய்துவிட்டு சென்றனர்.

Similar News