ஆன்மிகம்

இன்று கல்லறை திருநாள்: மறைந்த உறவினர்களுக்கு கிறிஸ்தவர்கள் கண்ணீர் அஞ்சலி

Published On 2018-11-02 03:29 GMT   |   Update On 2018-11-02 03:29 GMT
கல்லறை திருநாளை முன்னிட்டு மறைந்த உறவினர்களுக்கு ஏராளமான கிறிஸ்தவர்கள், கல்லறைக்கு சென்று இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். கல்லறைகளுக்குச் சென்று அவர்களை நினைவுகூர்வதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள், சகல ஆத்துமாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தையொட்டி சென்னை கல்லறை வாரியத்துக்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம், காசிமேடு, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த கல்லறை தோட்டங்கள் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. கல்லறைகளைப் பார்ப்பதற்கு மக்கள் இன்று மாலை வரை வந்து செல்வார்கள் என்பதால் விளக்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கல்லறைகளை கழுவி, பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி, ஜெபப் புத்தகத்தை படித்து, பாடல்களைப் பாடி, பின்னர் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்வதும், கண்ணீர் அஞ்சலி செலுத்துவதும் வழக்கமாக உள்ளது. மேலும், இந்தத் தினத்தையொட்டி அங்கு குவிந்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்தவர்கள் பலர் உதவிகளைச் செய்வதும் வழக்கம்.

கல்லறை திருநாள் நிகழ்ச்சிக்கு தேவையான பூ, மாலை, ஊதுபத்தி போன்ற பொருட்கள் பெருமளவில் கல்லறை தோட்டத்துக்கு வெளியே விற்பனை செய்யப்படும். மக்கள் அதிகம் கூடுவதால் அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் காவல் பணியில் ஈடுபடுவர்.
Tags:    

Similar News