ஆன்மிகம்
தேர் பவனி வந்த போது எடுத்த படம். (உள்படம்: புனித சலேத் அன்னை)

புனித சலேத் அன்னை தேர் பவனி

Published On 2018-08-16 04:59 GMT   |   Update On 2018-08-16 04:59 GMT
கொடைக்கானலில் புகழ்பெற்ற புனித சலேத் அன்னை திருத்தலத்தின் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
கொடைக்கானலில் புகழ்பெற்ற புனித சலேத் அன்னை திருத்தல பெருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக நேற்றுமுன்தினம் புதிய பீடத்தினை அர்ச்சிப்பு செய்த பின்னர் திருவிழா திருப்பலியினை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து திருஇருதய ஆலயத்தில் திருப்பலியும் மறையுரையும் திண்டுக்கல் மறை மாவட்ட உதவி பங்குத்தந்தை சைமன் சேசு அந்தோணி வழங்கினார். பின்னர் சாரல் மழையில் இரவில் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தினை நேற்று அதிகாலை அடைந்தது. இதில் பங்குத்தந்தை எட்வின் சகாயராஜா, உதவி பங்குத்தந்தைகள் சேவியர் அருள்ராயன், செல்வராஜ், முன்னாள் நகரசபை தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இபுராகிம், எட்வர்ட், விழா கமிட்டி தலைவர் ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் இறுதி நாளான நேற்று காலை திருஇருதய ஆலயத்தில் செபாஸ்டீன் ஆங்கிசாமியும் திருப்பலி வழங்கினார். கருணை இல்ல இயக்குனர் தாமஸ் தேசிய கொடி ஏற்றி திருப்பலி வழங்கினார். புனித சலேத் அன்னை ஆலயத்தில் உதவி பங்குத்தந்தைகள் ஜஸ்டீன் திரவியம், அருள் அந்தோணி, சேவியர் ராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலி வழங்கினர்.

பின்னர் சப்பர பவனி திருஇருதய ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக தூய சலேத் அன்னை ஆலயத்தினை அடைந்தது. அங்கு நற்கருணை ஆசியுடன் கொடியிறக்கம் நடைபெற்றது. விழாவில் கொடைக்கானல் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. 
Tags:    

Similar News