சினிமா
ரஜினிகாந்த்

‘தாதா சாகேப் பால்கே விருது’ வழங்கிய மத்திய அரசிற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி - ரஜினிகாந்த்

Published On 2021-04-01 14:03 IST   |   Update On 2021-04-01 14:17:00 IST
தனக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த், தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்திய சினிமாத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்த கலைஞர்களுக்கு, தாதா சாகேப் பால்கே விருது, மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு, திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: “இந்தியத் திரையுலகின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஒட்டுனரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் திரு, சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் திரு கே.பாலச்சந்தர் அவர்களுக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.



என்னை மனமார்ந்து வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் திரு, ஓ. பன்னீர் செல்வம் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய எதிர்கட்சித் தலைவர் நண்பர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் கமல் ஹாசன் அவர்களுக்கும், மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Similar News