சினிமா
எம்.ஜி.ஆர்., கே.பி.ராமகிருஷ்ணன்

40 ஆண்டுகளுக்கு மேலாக எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்

Published On 2021-02-04 07:38 IST   |   Update On 2021-02-04 19:07:00 IST
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளரும், அவருக்கு மாற்றாக படங்களில் டூப் போட்டு நடித்தவருமான கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். சினிமாவில் சண்டைப்பயிற்சி கலைஞராகவும், எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த அனைத்து படங்களிலும் அவருக்கு டூப் போட்டு நடித்தவர் இவர்தான். ஒரு சில படங்களில் நம்பியாருக்கும் டூப் போட்டு நடித்தார். 

இவர் தனது கோபாலபுர இல்லத்தில், கடந்த டிசம்பர் 27ம் தேதி மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். இதில், அவரது தலையில் அடிபட்டு, மூளையில் ரத்தக் கட்டு ஏற்பட்டதால் சுயநினைவை இழந்தார். இதையடுத்து மயிலாப்பூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 



அங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், கடந்த ஜனவரி 1ந் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த கே.பி.ராமகிருஷ்ணன், சுயநினைவு திரும்பாமலேயே நேற்று உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. மறைந்த கே.பி.ராமகிருஷ்ணனுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மனைவி கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார்.

Similar News