சினிமா
தி ஷோ பிபுள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், புதிய திரைப்படத்திற்கு கேப்டன் என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘டெடி’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணி மீண்டும் புதிய படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி இனிதே நடந்து வரும் நிலையில், இப்படத்திற்கு “கேப்டன்” என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூறுகையில்.. “கேப்டன்” எனும் தலைப்பு நேர்த்தியானது, நிஜத்தில் பல விசயங்களில் மிகப்பெரும் மதிப்பை கொண்டிருக்கும் தலைப்பு இது. ஒரு விளையாட்டு குழுவில் ஆரம்பித்து, சமூகத்தின் எந்த ஒரு குழுவிலும், கேப்டன் எனும் பொறுப்பு மிக முக்கியமானது. அது வெறும் தலைமை என்கிற இடம் கிடையாது. மொத்த குழுவையும் வழிநடத்தி செல்லும் கடமை கொண்ட, மிகமுக்கியமான பொறுப்பு. இது அப்படியே படத்தில் ஆர்யா ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தும். தொடர்ந்து தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் மேலும் கூறுகையில், தலைப்பு ஒரு படத்திற்கு மிகவும் முக்கியம், அதுதான் ரசிகர்களை படம் நோக்கி ஈர்க்கும் மிக முக்கியமான கருவி, அதிலும் OTT தளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் திரைப்படங்கள் மொழி, நாடு, இன எல்லைகளை கடந்து உலகின் பல முனைகளுக்கும் எளிதாக சென்று சேர்கிறது. ஆனால் அங்குள்ள ரசிகர்களை படத்தை நோக்கி இழுக்கும் முதல் அம்சமாக இருப்பது, படத்தின் தலைப்பு தான். எல்லாவற்றையும் தாண்டி இந்த கதையும், களமும் இந்த தலைப்பு 100 சதம் பொருத்தமானது என்பதை நிரூபிக்கும் என்றார்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிபிற்காக, வட இந்திய பகுதிகளுக்கு டிசம்பர் மாத மத்தியில் செல்லவுள்ளது. அங்கு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இப்படத்தில் நடிகை சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
“கேப்டன்” படத்திற்கு, டி.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆர்.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார்.
இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.