சினிமா
டி.சம்பத்குமார் இயக்கத்தில் அசோக், சாந்தினி தமிழரசன் நடிப்பில் உருவாகி வரும் மாயத்திரை படத்தின் முன்னோட்டம்.
பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அதிகம் திகில் படங்கள் தயாராகின்றன. அந்த வரிசையில் மாயத்திரை என்ற பெயரில் புதிய பேய் படம் தயாராகி உள்ளது. இதில் அசோக் கதாநாயகனாகவும், சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜகுமாரி ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தை டி.சம்பத்குமார் இயக்கி உள்ளார்.
குஷ்பு, சுஹாசினி, மீனா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சாய் தயாரித்துள்ளார். இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் சம்பத்குமார் கூறும்போது, “மாயத்திரை படத்தில் 26 நடிகர், நடிகைகள் பேயாக நடித்து இருக்கிறார்கள்.
தீங்கு செய்யாத பேயின் தியாகமும், பேரன்பும், குலதெய்வ வழிபாட்டின் சிறப்பும் படத்தில் இருக்கும். வில்லனும் பேயாக வருகிறார். ஒரு தியேட்டரும் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. பழி வாங்கலும், பயமுறுத்தலும் இல்லாத பேய் படமாக தயாராகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது” என்றார்.