சினிமா
சாந்தி சௌந்தரராஜன்

சாந்தி செளந்தரராஜன்

Published On 2021-03-15 11:21 IST   |   Update On 2021-03-15 11:21:00 IST
888 புரொடக்‌ஷன்ஸ் முதல் தயாரிப்பில் ஜெயசீலன் தவப்புதல்வி இயக்கத்தில் உருவாக இருக்கும் சாந்தி செளந்தரராஜன் படத்தின் முன்னோட்டம்.
பல படங்களை விநியோகம் செய்து வரும் 888 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் முதன் முறையாக தயாரிப்புத் துறையில் தடம் பதிக்கிறது. கடந்த வருடம் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'மாமாங்கம்' திரைப்படத்தில ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பிள்ளையிடம் அசோஸியேட் ஒளிப்பதிவாளராகவும் மற்ற பல படங்களில் இணை, துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜெயசீலன் தவப்புதல்வி இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனமெழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்தியாவிற்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்ற தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் சாந்தி செளந்தரராஜன். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனையின் அறிக்கையின் அடிப்படையில், பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடமிருந்து திரும்பி பெறப்பட்டது.

இந்த அவமானகரமான சோதனையின் காரணமாக சாந்தி செளந்தரராஜன் தடகள போட்டிகளில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.

அவர் வாழ்க்கையில் நடந்த, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் திருப்பங்களுடன் கதை வடிவமைக்கப்பட்டு, முழுக் கதையினையும் சாந்தி செளந்தரராஜனிடம் ஒப்புதல் பெற்று, இக்கதை படமாக்கப்பட உள்ளது.

இப்படத்தில், சாந்தி செளந்தரராஜனின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, 'ஆஸ்கர் விருது பெற்ற 'ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, வசனங்கள் பொன் பார்த்திபன் எழுதியுள்ளார். மேலும் இப்படத்தில், ஒளிப்பதிவு - கோபிநாத் D தேவ், படத்தொகுப்பு - சங்கத்தமிழன், கலை - காளி. ப்ரேம் குமார் என பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

Similar News