சினிமா
நியு ஆர்.எஸ்.எம் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷிவபாரதி, ஜாய் பிரியா நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜலிங்கா படத்தின் முன்னோட்டம்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியான 100 க்கும் மேற்பட்ட படங்களை திருச்சி, தஞ்சை, விநியோக பகுதிகளில் வெளியிட்ட நிறுவனம் நியு ஆர்.எஸ்.எம் பிலிம்ஸ். இந்நிறுவனம் முதன்முறையாக தயாரிக்கும் திரைப்படம் ராஜலிங்கா. இப்படத்தில் கதைநாயகனாக ஷிவபாரதி நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜாய் பிரியா நடித்துள்ளார். மேலும் மாறன்பாண்டியன், குமரேசன் ராஜேஷ், ரோடிஷா, தியா, அரிகரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
ராஜலிங்கா படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யகண்ணன் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பு பணிகளை செந்தில் கருப்பையா கவனிக்கிறார். வல்லவன் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஷிவபாரதி இயக்கியிருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் ஷிவபாரதி கூறியதாவது: “இப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறேன். அழகை பார்த்து காதல்வயப்படும் ஆண், பெண் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் முன் வரம்புமீறி நடப்பதால் பெற்றோர்களுக்கும், பொது சமூகத்துக்கும் ஏற்படும் நெருக்கடியை பேசுகிறது இப்படம்.
ஒரு காலத்தில் சமூகத்தில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு தமிழ் சினிமா மீது பழி போடப்பட்டது. இன்றைக்கு உலகம் கையடக்க கைபேசிக்குள் அடங்கி போனது. இதனை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதை காட்டிலும் மனித சமூகத்துக்கு எதிரான செயல்களுக்காகவே அதிகம் பயன்படுத்தபடுகிறது. அப்படி ஒரு பாதிப்பை எதிர்கொள்ளும் காதல் ஜோடியை பற்றிய கிரைம் திரில்லராக இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறேன்” என்றார்.