எவ்வளவு கேவலமான எண்ணம்..!- ஜனநாயகனுக்கு ஆதரவாக இயக்குனர் அமீர் பதிவு
விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் 'ஜன நாயகன்'. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த கோர்ட் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஜனநாயகனுக்கு ஆதரவாக திரைத்துறையினர், அரசியல்வாதிகள் பதிவு வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் அமீர் ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு சினிமாவை ரிலீஸ் பண்ணவிடாமல் தடுத்துட்டா அவங்கள தன் வழிக்கு கொண்டு வரலாம்ன்ற எண்ணம் எவ்வளவு கேவலமானது.
தமிழ்நாட்டில் அதிகாரத்தை யார் கையில் கொடுக்க வேண்டும் என்று மக்கள் தான் முடிவு செய்வாங்க அயோக்கிய அரசியல்வாதிகள் அல்ல.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.