தெலுங்கு சினிமாவைவிட்டு விலகி இருப்பதற்கு இதுதான் காரணம்- நடிகை அமலா பால்
- சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலாபால்.
- பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சமீபகாலமாக அமலாபாலை சுற்றி சர்ச்சைகள் வலுத்து வருகின்றன. தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமலாபால் அங்கு பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது தெலுங்கு சினிமா குறித்தும் சில கருத்துகளை அவர் முன்வைத்து பேசினார்.
அதில், "தெலுங்கு திரையுலகுக்கு நான் சென்ற போது, அங்கு கமர்ஷியல் படங்களே ஆட்சி செய்வதை அறிந்தேன். பாடல் மற்றும் காதல் காட்சிகளுக்கு மட்டுமே கதாநாயகிகளின் தேவை இருக்கிறது. மேலும் அவர்கள் எடுத்து வரும் திரைப்படங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தன.
எப்போதும் 2 கதாநாயகிகள், காதல் காட்சிகள், பாடல்கள் என எல்லாமே கவர்ச்சியாக இருந்தது. எனவே அந்த திரையுலகில் என்னை இணைத்து கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் தெலுங்கில் நான் மிகவும் குறைவான படங்களிலேயே நடித்தேன். தற்போது நீண்ட காலமாக தெலுங்கு சினிமாவை விட்டு விலகி இருக்கிறேன்" என்று பேசியிருந்தார். தெலுங்கு சினிமாவை விமர்சித்து அமலாபால் பேசிய பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.