அன்புமணி ராமதாஸ்
இசையமைப்பாளர் கீரவாணிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
- 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
- இதில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திற்கும் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்திற்கும் விருது வழங்கப்பட்டது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.
சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
மேலும், யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படமும் ஆஸ்கர் விருதை வென்றது. இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் கீரவாணி என்ற மரகதமணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
முதுமலையில் ஆதரவற்ற யானைக்குட்டிகளை பராமரித்து வரும் பொம்மன்-பெள்ளி இணையர் குறித்த தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அப்படத்தின் இயக்குனர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்க ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.