சினிமா
விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகளை நட்ட நடிகை
அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார்.
சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் எதிர்பாராத வகையில் மாரடைப்பால் காலமானார். இது திரை உலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற முயற்சியில் விவேக் ஈடுபட்டிருந்தார். 33 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்ட நிலையில் அவர் தனது இலக்கை அடையும் முன்னரே காலமாகிவிட்டார்.
இந்த நிலையில் விவேக் விட்ட பணியை தொடர்ந்து நடத்த வேண்டும் என பல ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஆத்மிகா, மறைந்த விவேக் நினைவாக தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆத்மிகா கூறும்போது, நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே அவர் மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார்.
அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்' என்றார்.