சினிமா
2-வது கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா போலீசில் பரபரப்பு புகார்
நடிகை ராதா, தமிழில் சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆனார்.
பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ், சத்யராஜ் நடித்த அடாவடி, கார்த்திக் நடித்த கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். சென்னையில் வசித்து வரும் நடிகை ராதா, கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜா (40) என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலேயே தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே வசந்த ராஜா, அடிக்கடி ராதா மீது சந்தேகப்பட்டதாகவும், அவருடன் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக அடித்து கொடுமைபடுத்தியதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த நடிகை ராதா, தன்னை அடித்து கொடுமைப்படுத்திய வசந்த ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் நந்தினி இதுபற்றி விசாரணை நடத்தினார். இதில் சப்- இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி 2 குழந்தைகளுடன் ஆர்.ஏ.புரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருவது தெரியவந்தது. மேலும் வசந்தராஜா திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது நடிகை ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதல் மனைவிக்கு தெரியாமல் ராதாவை 2-வதாக ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் வசந்தராஜா.
நடிகை ராதா ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவர் மீதும் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.