சினிமா
சொன்னது சொன்னபடி நடக்கும் - கர்ணன் தயாரிப்பாளர்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ணன் படம் குறித்து வெளியாகி இருக்கும் செய்திக்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லால், யோகிபாபு, லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக வருகிற ஏப்ரல் 10-ந் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கர்ணன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று செய்திகள் வெளியானது.
இதற்கு கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ‘சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்’ என்று கூறியிருக்கிறார்.