சினிமா
மலையாளத்தில் முன்னணி நடிகையாகவும், கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன், நான் ஒரு மண் மாதிரி என்று பேட்டியளித்துள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகையான ரஜிஷா விஜயன் கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வரும் 9ந்தேதி வெளியாக இருக்கும் கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ரஜிஷா விஜயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது சின்ன விபத்து ஏற்பட்டு காலில் கட்டு போட்டிருந்தேன். அப்போதுதான் கர்ணன் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது.
தாணு சார் அலுவலகத்தில் தான் கதை கேட்டேன். கதை கேட்டதும் மிகவும் பிடித்துவிட்டது. என்னுடைய ஜூன் படம் பார்த்துவிட்டு தான் என்னை தேர்வு செய்ததாக மாரி செல்வராஜ் கூறினார்.
ஒரு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதுதான் முக்கியம். உடையோ அலங்காரமோ அல்ல. அதே சமயம் என் உடல்வாகுக்கு பொருத்தமான உடை தான் அணிந்து நடிக்க முடியும். நான் ஒரு மண் மாதிரி. அதை அழகாக உருவாக்குவது டைரக்டர் கைகளில் தான் இருக்கிறது. கர்ணன் படத்திலேயே எனக்கு மேக்கப் கிடையாது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்’ என்றார்.