சினிமா
பாலிவுட்டை புரட்டி எடுக்கும் கொரோனா - நடிகை கத்ரீனா கைஃப்பிற்கும் தொற்று உறுதி
மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர், அமீர் கான், மாதவன், அக்ஷய் குமார், ஆலியா பட் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகை கத்ரீனா கைஃப்பிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்ததும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நடிகை கத்ரீனா கைஃப், அடுத்ததாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருந்த நிலையில், நடிகை கத்ரீனா கைஃப்பிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது.