சினிமா
ஷங்கர்

‘இந்தியன் 2’ விவகாரம் - இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் வழக்கு

Published On 2021-04-01 14:51 IST   |   Update On 2021-04-01 14:51:00 IST
இந்தியன் 2 படத்திற்காக போடப்பட்ட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இதுவரை 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை.

இதனிடையே, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஷங்கர் தயாராகி வருகிறார். அடுத்து பாலிவுட்டிலும் ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தங்களது ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு எந்த ஒரு படத்தையும் ஷங்கர் இயக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.



லைகா நிறுவனம் அளித்துள்ள புகாரில், “இந்தியன் 2 படத்திற்காக போடப்பட்ட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இதுவரை 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது. இயக்குனர் ஷங்கருக்கு பேசப்பட்ட சம்பளமான 40 கோடி ரூபாயில் 14 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டது. 

மீதமுள்ள 26 கோடி ரூபாயையும் நீதிமன்றத்தில் கட்டிவிடுகிறோம். இந்தியன் 2 படத்தை முடிக்கும் வரை மற்ற படங்களை அவர் இயக்கத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் அளிக்க முடியாது எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார். மேலும் இதுகுறித்து, இயக்குனர் ஷங்கர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Similar News