சினிமா
படப்பிடிப்பு தளம், விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம் விதிப்பு - சுகாதாரத்துறை நடவடிக்கை

Published On 2021-03-31 03:07 GMT   |   Update On 2021-03-31 03:07 GMT
பழனி அருகே நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பழனியை அடுத்த காரமடை தோட்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு நேற்று நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், படப்பிடிப்பை பார்வையிட அந்த மண்டபம் முன்பு திரண்டனர். இதனால் காலை முதலே அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

இதற்கிடையே படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. 



குறிப்பாக, படப்பிடிப்பின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை, முகக்கவசம் அணியவில்லை என்பன போன்ற புகார் எழுந்தன. அப்போது, அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத காரணத்தால் படக்குழுவினருக்கு ரூ.1,500 அபராதம் விதித்தனர்.

கடந்த மாதம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் இயக்குனர் ஹரி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News