சினிமா
தியா மிர்சா

என்ன கொடுமை சார் இது... வயதான நடிகருக்கு 19 வயது ஹீரோயினா? - பிரபல நடிகை காட்டம்

Published On 2021-02-24 13:06 IST   |   Update On 2021-02-24 16:47:00 IST
வயதான நடிகர்களுக்கு இளம் நடிகைகளை ஜோடியாக நடிக்க வைப்பதற்கு ஆணாதிக்கமே காரணம் என பிரபல நடிகை தியா மிர்சா தெரிவித்துள்ளார்.
தமிழில் என் சுவாச காற்றே படத்தில் நடித்தவர் தியா மிர்சா. இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 40 வயதாகும் தியா மிர்சா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

அவர் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, ''சினிமா துறையில் ஆணாதிக்கம் உள்ளது. வயதான மூத்த நடிகர்கள் 20 வயதுக்கு குறைந்த நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது. சினிமாவில் இருக்கும் ஆணாதிக்கமே இதற்கு காரணம். வயதான நடிகர்களின் கதாபாத்திரங்களை பிரதானமாக வைத்து திரைக்கதை எழுதுகின்றனர். 



ஆனால் வயதான நடிகைகளை மனதில் வைத்து கதைகள் எழுதுவது இல்லை. ஏராளமான நடுத்தர வயது நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கான கதைகளை யாரும் எழுதுவது இல்லை. 

படத்துக்கு படம் இளம் நடிகைகளையே நடிக்க வைக்க விரும்புகிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் 19 வயது நடிகையுடன் ஜோடியாக நடிப்பது ஆச்சரியமாக உள்ளது’’ என்று கண்டித்துள்ளார்.

Similar News