சினிமா
வெளியுலகிற்கு தெரியாமல் இருந்த என் சாதனைகள் ‘பிக்பாஸ்’ மூலம் வெளிப்பட்டது மகிழ்ச்சி - வேல்முருகன்
வெளியுலகிற்கு தெரியாமல் இருந்த தன் சாதனைகள் ‘பிக்பாஸ்’ மூலம் வெளிப்பட்டது மகிழ்ச்சியாக இருப்பதாக பாடகர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது: 20 ஆண்டுகளாக பின்னணி பாடல் மூலம் எனது குரல் பல இடங்களில் அறிமுகம் ஆகியிருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அந்த பாடல்களை பாடியதால் எனது முகமும் தற்போது அனைத்து பகுதியிலும் நல்ல பரிட்சயம் ஆகியுள்ளது.
கலைமாமணி விருது, டாக்டர் பட்டம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்கள் கொடுத்துள்ள நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் சென்றீர்கள் என கேட்கின்றனர். இதன் மூலம் எனது அடுத்தகட்ட இலக்கை முன்னெடுத்து செல்ல முடிந்துள்ளது.
கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை நடத்தியது பெருமையான ஒன்று. நடிகர் கமல்ஹாசன் வாயால் எப்பொழுதும் என்னை டாக்டர் என்று அழைத்ததோடு, வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த என் சாதனைகளை நிகழ்ச்சியில் என் மூலமே வெளிப்படுத்தி ஊக்கப்படுத்தியவர்.
தற்போது 4 படங்களில் பாடல்கள் எழுதியுள்ளேன். 2 படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளேன். கடந்த முறை வைத்தீஸ் வரன்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபோது தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது. பின்னர் வந்தபோது பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. வைத்தீஸ்வரன்கோவில் எப்பொழுதும் எனது வாழ்வில் திருப்பத்தை தந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.