சினிமா
ரூபன்

நடிகரும், கதாசிரியருமான ரூபன் கொரோனாவால் மரணம்

Published On 2020-09-22 12:41 IST   |   Update On 2020-09-22 12:41:00 IST
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் பணியாற்றிய ரூபன், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் பணியாற்றியவர் ரூபன். இவர் விஜய்யின் கில்லி, விக்ரமின் தில், தூள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இரண்டு முகம் உள்பட சில படங்களில் கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ரூபனுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் உறுதியானது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 



இதனிடையே அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை ரூபனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மருத்துவ குழுவினர், திருச்சியில் உள்ள ஓயாமரி மயானத்தில் அடக்கம் செய்தனர். 54 வயதாகும் ரூபனுக்கு சங்கீதா என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. 

Similar News