சினிமா
படப்பிடிப்பு முடியும் முன்பே முதல் பாடலை வெளியிடும் விமல்
விமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் சோழநாட்டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே முதல் பாடலை வெளியிட இருக்கிறார்கள்.
விமல் நடிப்பில் தற்போது சோழநாட்டான் என்ற படம் உருவாகி வருகிறது. வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதையில் விமல் நடிக்கும் முதல் படம் இது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டில் உள்ள மலைப்பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தஞ்சாவூர், ஹைதராபாத், வைசாக் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லராக உருவாக்கி வருகிறார்கள்.
பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு தான் அப்படத்தின் இசையை வெளியிடுவார்கள். ஆனால், தற்போது தஞ்சாவூரில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த படம் சோழநாட்டை மையப்படுத்தி உருவாவதால், படப்பிடிப்பு பணிகளின் இடையே குடமுழுக்கை முன்னிட்டு சோழநாட்டை பெருமைப்படுத்தும் விதமாக பிப்ரவரி மாதத்திலேயே முதல் பாடலை வெளியிட உள்ளார்கள்.
இப்படத்தில் விமலுடன் காருண்ய கேதரின், தென்னவன், நாகி நாயுடு, சீதா, பரணி, டேனியல் பாலாஜி, சென்ட்ராயன், ராமர், தங்கதுரை, போஸ் வெங்கட், சௌந்தரபாண்டியன், எம்.எஸ்.குமார் இன்னும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்க நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் ஷங்கர் இசையமைக்க கலைக்குமார் மற்றும் சபரீஷ் பாடல்கள் எழுதுகிறார்கள். பாரிவள்ளல் தயாரித்து வருகிறார்.