சினிமா
வெள்ளம் சூழ்ந்ததால் துபாய் விமான நிலையத்தில் சிக்கி தவித்த அதர்வா
துபாயில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நடிகர் அதர்வா விமான நிலையத்தில் சிக்கி தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அதர்வா, கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை அசர்பைஜான் நாட்டில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்காக அதர்வா சனிக்கிழமை சென்னையில் இருந்து துபாய் வழியாக அசர்பைஜான் செல்லும் விமானத்தில் கிளம்பினார். ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டுக்கு சென்று இருக்கவேண்டும். ஆனால் துபாயில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. துபாய் விமான நிலைய ஓடுபாதையும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதால் விமானங்கள் கிளம்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அதர்வா சென்ற விமானமும் சிக்கியதால், அவரால் ஞாயிறு அன்று அசர்பைஜான் நாட்டுக்கு செல்ல முடியவில்லை. துபாய் விமான நிலையத்திலேயே சிக்கி கொண்டார். ஒரு நாள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. பின்னர் புறப்பட்டு சென்றார்.
மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அபுதாபி, துபாய் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் முக்கியமான சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.