சினிமா
வரி ஏய்ப்பு புகார் எதிரொலி.... நடிகை வீட்டில் ஐ.டி. ரெய்டு
வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, நடிகை ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. அடுத்து சி.வி.குமார் தயாரித்து இயக்கிய மாயவன் படத்தில் நடித்திருந்தார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர், அந்தால ராக்சசி என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தமிழ், இந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார்.
ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் லாவண்யா திரிபாதி, ரூ.30 லட்சம் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி உள்ளனர்.
சோதனையில் கைப்பற்றப்பட்டப் பொருட்கள் பற்றிய விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. வீட்டில் சோதனை நடந்த போது, நடிகை லாவண்யா படப்பிடிப்பில் இருந்தார். அதை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.
நடிகை ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாவண்யா வீட்டில் மட்டுமல்லாமல், சில பிரபலங்களின் வீடுகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இந்த சோதனை நடந்துள்ளது.