சினிமா
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு தடையா? - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ஹீரோ படத்திற்கு தடை பற்றிய செய்திகளுக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹீரோ’. ரூ.10 கோடி கடனை திருப்பி தராததால் சென்னை உயர்நீதி மன்ற நடுவர் மையம் இப்படத்திற்கு தடை விதித்து உத்தரவு விட்டதாக செய்திகள் வெளியானது.
இதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் ’ஹீரோ’ தமிழ் திரைப்படம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோசால் தயாரிக்கப்பட்டுள்ளது. வேற எந்த தயாரிப்பு நிறுவனமும் இதில் சம்பந்தப்படவில்லை.
சமூக ஊடகங்களில் சில பொய்யான தகவல்களைப் பார்த்தோம். அதில் ’ஹீரோ’ என்று பெயரிடப்பட்ட தமிழ்ப் படத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது என்ற விஷயம் முற்றிலும் பொய்யானது. அந்த தகவல்களில் படம் 24 ஏ.எம் புரொடக்ஷன்சால் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தவறே. இத்தனைக்கும் ’ஹீரோ’ என்ற படத்தில் தாங்கள் சம்பந்தப்படவே இல்லை என 24 ஏ.எம் புரொடக்ஷன்ஸ் முன்னதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், ’ஹீரோ’ படத்தின் பெயர், டிரேட் மார்க், டொமைன் பெயர் மற்றும் லோகோவை அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றனர். எங்கள் திரைப்படம் ’ஹீரோ’ தொடர்பாக, 24 ஏ.எம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடமோ, டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமோ எங்களுக்கு எந்த விதமான தொடர்பும், ஒப்பந்தமும் இல்லை என்பதைப் பொதுமக்களுக்குக் கூற விரும்புகிறோம்.
’ஹீரோ’ தொடர்பாக எந்தத் தவறான தகவல் வந்தாலும், அப்படியான ஏமாற்று வேலைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். அப்படித் தவறு செய்பவர்களுக்கு எதிராகவும், எங்கள் ’ஹீரோ’ திரைப்படத்தின் பெயரை முறையான அனுமதியின்றி பயன்படுத்தும் டி.எஸ்.ஆர் பிலிமிஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.