சினிமா
நடிகர் தனுஷ் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு
கதிரேசன் தொடர்ந்த வழக்கில் நடிகர் தனுஷ் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய மதுரை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவர், நடிகர் தனுசை தனது மகன் என்றும், வயது முதிர்வின் காரணமாக தனக்கும், தன்னுடைய மனைவி மீனாட்சிக்கும் மாதந்தோறும் ஜீவனாம்சத்தை நடிகர் தனுஷ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதை எதிர்த்து நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் கதிரேசன் மேலூர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது. தனுஷ் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவை போலியானது. எனவே ஐகோர்ட்டில் போலி சான்றிதழ் தாக்கல் செய்ததற்காக அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதிரேசன் மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த கோர்ட்டு, நடிகர் தனுஷ் மற்றும் மதுரை கோ.புதூர் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் இந்த வழக்கு மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுசின் அசல் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்யுமாறு, கதிரேசன் தரப்புக்கு மாஜிஸ்திரேட்டு முத்துராமன் உத்தரவிட்டார். விசாரணையை அடுத்த மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.