சினிமா
முன்னாள் காதலரை விமர்சிக்க மாட்டேன் - இலியானா
காதலருடனான உறவில் விரிசல் ஏற்பட்டதால் பிரிந்த நடிகை இலியானா அவரை விமர்சிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
விஜய் நடித்த `நண்பன்’ படத்தின் மூலம் பிரபலமானவர் இலியானா. இவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆன்ட்ரூ நீபோனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். உறவில் விரிசல் ஏற்பட்டதால் கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் பிரிந்தனர். அதை தொடர்ந்து, இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் அன்பாலோ செய்தனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் இலியானா நீக்கிவிட்டார்.
எனினும் இதுபற்றி வெளிப்படையாக இருவருமே கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி ஊடகங்களில் அதிகம் பேசாத இலியானா அண்மையில் ஓர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது காதல் முறிவு பற்றி மனம் திறந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- ’என்னை அக்கறையோடு கவனித்துக்கொள்ள எனக்கு நானே கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை நான் உணர்ந்த அந்த நிமிடம் முதல் எனக்குள் பெரிய மாற்றம் நிகழ்ந்தது.
மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் அந்த மாற்றத்தை உணர்ந்தேன். வாழ்க்கையில் மோசமான நேரங்களை கடக்க நேரும்போது, என்னை நானே கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். எப்போதும் ஒருவரை சார்ந்தே இருக்க முடியாது என்றும் கண்டறிந்தேன். அதன் பிறகு ஒரு நிபுணரை சந்தித்தேன். அவருடைய ஆலோசனைகளை பின்பற்றிய பிறகு என்னை நானே ஏற்றுக்கொள்ள கற்றுக்கொண்டேன்.
அந்த நிகழ்விலிருந்து கசப்பான அனுபவத்தை எடுத்துக்கொண்டோ, விரோதத்தை வளர்த்துக்கொண்டோ வெளியே வர வேண்டும் என்று நினைக்கவில்லை. வாழ்க்கையில் கடினமான தருணங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், அவை என்னை உறுதியானவளாக மாற்றியிருக்கிறது. அவரை பற்றி தவறாகப் பேசவோ விமர்சிக்கவோ மாட்டேன். நான் இப்போது நல்ல இடத்தில் இருக்கிறேன். அவருக்கும் எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
வேறு ஒரு காதலுக்கு தயாரா என்ற கேள்விக்கு பதிலளித்த இலியானா, ``ஒருவரைக் காதலித்துக் கொண்டிருப்பது என்பது வேறு. காதலர் ஒருவர் இருக்கும்போது அமைதியாகவும் பாதுகாப்பாகவும் உணர முடியும். ஆனால், அதைவிட மன அமைதி முக்கியம். தற்போது மற்றோர் உறவுக்கு நான் தயாராக இல்லை. இப்போது நான் இருக்கும் இடத்திலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை நானே காதலிக்கவும் தொடங்கிவிட்டேன்” என்று பதில் அளித்தார்.