சினிமா
கவுதம் மேனன் - கார்த்திக் நரேன்

நரகாசுரன் எப்போது? - கவுதம் மேனனிடம் கேள்வி எழுப்பிய கார்த்திக் நரேன்

Published On 2019-11-05 02:25 GMT   |   Update On 2019-11-05 02:25 GMT
அரவிந்த சாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவாகி இருக்கும் நரகாசுரன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று கவுதம் மேனனிடம் இயக்குனர் கார்த்திக் நரேன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் பணப் பிரச்சனை காரணமாக கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகளால் தாமதமாகி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த மாதம் திரைக்கு வருகிறது.

அதுபோல், கவுதம் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் படமும் சில பிரச்சினைகளால் திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. இதில் அரவிந்த சாமி, ஸ்ரேயா ஆகியோர் நடித்துள்ளனர். நரகாசுரன் படம் முடங்கியதற்காக கவுதம் மேனனை கார்த்திக் நரேன் ஏற்கனவே விமர்சித்து எங்களை குப்பையை போல் பயன்படுத்தினீர்கள் என்று சாடி இருந்தார். 



இந்த நிலையில் தனுசின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் திரைக்கு வருவது குறித்து டுவிட்டரில் மகிழ்ச்சி வெளியிட்ட கவுதம் மேனன், “என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான படம் துருவ நட்சத்திரம். அதில் விக்ரமுடன் பணிபுரிந்தது சிறந்த அனுபவம். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் 60 நாட்களில் முடிந்து விடும். படம் விரைவில் திரைக்கு வரும்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடியாக கவுதம் மேனனிடம் கேள்வி எழுப்பி கார்த்திக் நரேன் வெளியிட்ட பதிவில், “நரகாசுரன் படம் எப்போது வெளியாகும் என்று விளக்கினால் உதவியாக இருக்கும் சார். இந்த படம் எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது” என்று கூறியுள்ளார். இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News