சினிமா
சினம் கொண்ட போலீஸ் அதிகாரியாக அருண் விஜய்
தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் சினம் கொண்ட போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
அருண் விஜய் நடிப்புல் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘சினம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார்.
இப்படம் குறித்து அருண் விஜய் கூறும்போது, ‘எப்போதும் எந்தவொரு விஷயத்திலும், எந்தவொரு தொழிலும் கோபம் எனும் பண்பு எதிர்மறையானதாகவே அடையாளப்படுத்தப்படும். கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச்சினம் அப்பாடியானதொன்று அல்ல. பலநேரத்தில் கோபமானது பல விசயங்களில் சரியானதாக இருக்கும். தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாகவே இருக்கும்.
இப்படத்தின் கதைநாயகன் அப்படியான சினம் கொண்டவன். இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் மிக அற்புதமாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நவம்பர் 8 முதல் துவங்கவுள்ளது’ என்றார்.