சினிமா
மனிஷா கொய்ராலா

எனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா

Published On 2019-10-22 12:16 IST   |   Update On 2019-10-22 12:16:00 IST
நடிகை மனிஷா கொய்ராலா தனது வாழ்க்கையை மோசமாக்கிய பழக்கம் குறித்து அவர் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மனிஷா கொய்ராலா இந்தி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சாம்ராட் டாகல் என்பவரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். மனிஷா கொய்ராலாவுக்கு 2012-ல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 

நைனிடாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மனிஷா கொய்ராலா கலந்து கொண்டு பேசியதாவது:- எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்த புத்தகம் எழுதினேன். என்னை பார்த்து யாரேனும் புற்றுநோயில் சிக்கி குணமடைந்தவர் என்று சொன்னால் அதற்காக வருத்தப்பட மாட்டேன். புற்றுநோய் பாதிப்பில் நான் சிக்கியதை மறந்து எனது நடிப்பு மற்றும் திறமை பற்றி மக்கள் ஒரு நாள் பேசுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.



புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டபோது நான் சாவை எதிர்கொண்டேன். ஒரு ரோஜா தனது நிறத்தை இழக்கப்போகிறது என்று உணர்ந்தேன். ஆரம்பத்தில் மது பழக்கம் இருந்தது. இதனால்தான் எனது வாழ்க்கை மோசமாக மாறியது. அதை புத்தகத்திலேயே கூறி இருக்கிறேன். வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்பட்டது. இப்போது புதிதாக பிறந்த உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு மனிஷா கொய்ராலா கூறினார்.

Similar News